விமானிகள் பற்றாக்குறை காரணமாக ஆண்டு இறுதி விமானங்கள் சிலவற்றைக் கேத்தே பசிபிக் விமான நிறுவனம் ரத்து செய்தது. ஏற்கெனவே, கொவிட்-19 கொள்ளை நோய்க்குப் பிறகு விமானிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தநிலையில் இப்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலன் குறைபாடு காரணமாக விமானங்களை ரத்து செய்யும் நிலை அந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
பருவகால நோயால் பாதிக்கப்படும் விமானிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கிறது என அந்நிறுவனம் கூறியது.
சிறிய எண்ணிக்கையிலான விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இது குறித்து அந்நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
விமான நிலைய தரவுகளின்படி, கேத்தே விமான நிறுவனம் டிசம்பர் 29ஆம் தேதி ஹாங்காங்கிலிருந்து புறப்படும் 14 பயணிகள் விமானங்களை ரத்து செய்தது. இதனால் சிட்னி, டெல்லி, தைபே, ஷாங்காய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.