வரும் ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் ஜூன் 30ஆம் தேதிவரையிலான காலகட்டத்தில், பல்வேறு மத்திய சேமநிதிக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது.
மத்திய சேமநிதி வாரியம் மற்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, பெரும்பாலான கணக்குகளில் வட்டி மாற்றம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சேமநிதிக் கழகமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் புதன்கிழமை (மார்ச் 11) வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளன.
சிறப்பு, மெடிசேவ், ஓய்வூதியக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து ஆண்டுக்கு 4 விழுக்காடாக இருக்கும்.
சாதாரணக் கணக்குக்கான வட்டி விகிதம் தொடர்ந்து ஆண்டுக்கு 2.5 விழுக்காடாக இருக்கும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கடன்களுக்கான சலுகை வட்டி விகிதம் தொடர்ந்து ஆண்டுக்கு 2.6 விழுக்காடாக இருக்கும்.
ஓய்வூதியக் கணக்குச் சேமிப்புகளை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய சேமநிதிக் கணக்கு உறுப்பினர்கள் தங்கள் மத்திய சேமநிதிக் கணக்குச் சேமிப்புகளில் தொடர்ந்து கூடுதல் வட்டியைச் சம்பாதிப்பார்கள்.
55 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் தங்கள் ஒன்றிணைந்த கணக்குகளில், முதல் 60,000 வெள்ளிக்குக் கூடுதலாக ஒரு விழுக்காட்டு வட்டியைப் பெறுவார்கள். சாதாரணக் கணக்குக்கு அதிகபட்சத் தொகை $20,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய உறுப்பினர்கள், தங்கள் ஒன்றிணைந்த கணக்குகளில், முதல் $30,000க்குக் கூடுதலாக 2 விழுக்காட்டு வட்டியைச் சம்பாதிப்பார்கள். அடுத்த $30,000க்கு கூடுதலாக ஒரு விழுக்காடு கிடைக்கும்.
சாதாரணக் கணக்கிற்குக் கொடுக்கப்படும் கூடுதல் வட்டி, உறுப்பினரின் சிறப்பு அல்லது ஓய்வூதியக் கணக்கில் போடப்படும்.

