சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் கூட்டிய கூட்டத்தில் ‘ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடுகள்’ (FPDA) அமைப்பில் இடம்பெற்றுள்ள தற்காப்பு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஷங்ரிலா கலந்துரையாடல் தொடர்பில் சனிக்கிழமை (மே 31) இடம்பெற்ற அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐந்து தற்காப்பு அமைச்சர்களும் வட்டாரப் பாதுகாப்பில் தங்களது அமைப்பு வகிக்கும் பங்கிற்கு அளிக்க வேண்டிய கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தினர்.
1971ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அந்த அமைப்பில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
ஆஸ்திரேலியத் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ், பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் வெர்னன் கோக்கர், நியூசிலாந்து தற்காப்பு அமைச்சர் ஜுடித் காலின்ஸ், மலேசிய தற்காப்பு அமைச்சர் முஹம்மது காலித் நோர்தின் ஆகியோருடன் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சுங்கும் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.
அமைப்பின் நடவடிக்கைகள் தற்போதைய பாதுகாப்புச் சவால்களுக்குப் பொருத்தமானவையாக உள்ளனவா என்பதன் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க, தங்கள் நாடு வழங்கிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் அமைப்பு கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக அவர்கள் பேசினர்.
கடந்த ஆண்டு, அமைப்பின் சார்பாக ‘எக்சர்சைஸ் பெர்சாமா லீமா’ (XBL24) போர்ப் பயிற்சி நடத்தப்பட்டபோது ஐந்தாம் தலைமுறை போர்விமானங்களின் அறிமுகம் இடம்பெற்றது.
ஆஸ்திரேலியாவின் F-35 போர் விமானமும் நியூசிலாந்தின் P-8 கடல்துறை சுற்றுக்காவல் விமானமும் அவற்றில் அடங்கும்.
இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற கூட்டம் தொடர்பில் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“இவ்வாண்டுக்கான ‘எக்சர்சைஸ் பெர்சாமா லீமா’ (XBL25) போர்ப் பயிற்சி நடைபெறும்போது பிரிட்டனின் போர் விமானம் அறிமுகம் ஆவதை அமைச்சர்கள் எதிர்பார்க்கின்றனர். அது ‘ஐந்து நாட்டு தற்காப்பு ஏற்பாடுகள்’ அமைப்பின் ஒரு மைல்கல் சாதனையாக அமையும்.
“தங்களது நாட்டின் நிபுணத்துவ மதிப்பை உயர்த்தும் வண்ணம் உயர்தர விமானங்கள் பயிற்சியில் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர்கள் மறுவுறுதிப்படுத்தினர்.
“அமைப்புக்குப் பொருத்தமான உத்திகளை ஆக்ககரமான, வெளிப்படையான, அமைதியான தற்காப்பு ஏற்பாடாகத் தொடருவதையும் அவர்கள் மறுவுறுதிப்படுத்தினர். வட்டாரப் பாதுகாப்புக் கட்டமைப்புக்கு ஆதரவான உத்திகள் அவை,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
ஷங்ரிலா கலந்துரையாடலின் ஒருபகுதியாக நடைபெற்ற இருதரப்புக் கூட்டங்களில் ஜப்பானிய தற்காப்பு அமைச்சர் ஜெனரல் நகாட்டானியையும் திரு சான் சந்தித்தார்.