70 ஆண்டுகளாகச் சிறார்களை மகிழ்வித்துவரும் ‘ஸ்னூப்பி’ உள்ளிட்ட ‘பீனட்ஸ்’ (Peanuts) கேலிச்சித்திரக் கதாபாத்திரங்கள் சாங்கி விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளன.
வரும் ஜூலை 12ம் தேதி வரை சாங்கி விமான நிலையத்தில் இந்தக் கதாபாத்திரங்களைச் சார்ந்த அலங்காரங்களும் விளையாட்டுகளும் இடம்பெறவுள்ளன.
உலகப் புகழ்பெற்ற ‘ஸ்னூப்பி’ நாய்க்குட்டியைச் சித்தரிக்கும் அலங்காரங்கள், இதற்கு முன்னதாக 2022ல் விமான நிலையத்தில் இடம்பெற்றன.
இப்போது ‘ஸ்னூப்பி’யுடன் ‘பெல்’, ‘ஆண்டி’, ‘ஸ்பைக்’, ‘ஓலஃப்’ ஆகிய கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தக் கதாபாத்திரங்கள் யாவும் வெவ்வேறு விளையாட்டுகளில் கைதேர்ந்தவையாக இருக்கின்றன.
‘முனையம் 3’ புறப்பாட்டுக் கூடத்தின் இரண்டாவது மாடியில், ஐந்து மீட்டர் உயர ‘ஸ்னூப்பி’யுடன் பெரும் காற்பந்து ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயணப்பெட்டிகளைப் பதிவு செய்வதற்கான வரிசை 11ல் பிள்ளைகள் சென்று விளையாடலாம். ஏறுவதற்கான சறுக்குப் பலகைகள், குதித்தாடுவதற்கு மெத்தை எனப் பல்வேறு விளையாட்டுகள் காத்திருக்கின்றன.
வண்ணமயமான இந்த விளையாட்டு வளாகத்திற்குள் நுழைவதற்குக் கட்டணம் தேவைப்படும். புகைப்படங்கள் எடுக்கத்தக்க இடங்களை முனையம் 3ன் சுரங்கத்தளம் 2ல் வருகையாளர்கள் காணலாம்.
கோல் வலை கொண்ட சிறிய புல்வெளி ஒன்றும் அங்கு உள்ளது. உலகக் கிண்ணக் காற்பந்து மோகம் அவர்களைத் தொற்றிக்கொண்டால் அங்கு அவர்கள் ஆசைதீர விளையாடலாம்.
அத்துடன், ரிசார்ட்ஸ் வர்ல்ட் செந்தோசாவில் (Resorts World Sentosa) உள்ள ‘அட்வென்ச்சர் கோவ் வாட்டர்பார்’க்கில் குதூகலத்தையும் வேடிக்கையையும் அள்ளித் தெளிக்க ‘ஹாப்பிடன்புய்’ கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.
இந்தப் பூங்கா முழுவதும் வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை கண்ணைக் கவரும் வகையிலான புகைப்படத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், விறுவிறுப்பான நீர்ச்சறுக்குகள், ‘ஸ்நோர்கெலிங்’ (snorkelling) ஆகியவற்றுக்கும் இடையே நீங்களும் உங்கள் குழந்தைகளும் நின்று புகைப்படம் எடுத்து மகிழலாம்.
2020ல் அறிமுகமான இந்த ‘ஹாப்பிடன்புய்’ குழுவில், சான்ரியோ (Sanrio) நிறுவனத்தின் புகழ்பெற்ற ஆறு கதாபாத்திரங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

