சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஓலாம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் தலைமை நிதி அதிகாரியும் அவர்களின் பதவிகளிலிருந்து இம்மாதம் விலகவிருக்கின்றனர்.
சவூதி அரேபிய ஆதரவில் இயங்கும் ‘ஓலாம் அக்ரி ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின்மீது கவனம் செலுத்தும் இலக்குடன் அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஓலாம் நிறுவனத்தை ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குமுன் தோற்றுவித்த திரு சன்னி வார்கீஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இல்லாவிடினும், ‘ஓலாம் அக்ரி ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தொடர்வார்.
தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றிய திரு என். முத்துக்குமாரின் பணியும் மாற்றப்பட்டு, அவர் ஓலாம் அக்ரியின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்படுவார். ஏற்கெனவே, அவர் அப்பதவியை கடந்த 2025ஆம் ஆண்டுமுதல் வகித்துவந்தார்.
ஓலாம் குழுமப் பெருநிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முக்கிய மாற்றங்களில் தலைமைப் பதவிகள் வகித்தவர்களின் பணிகள் மாற்றப்படவுள்ளன என்ற அறிவிப்பு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி நடைபெறும் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அந்த மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.
“நிறுவன நிர்வாகக் கோட்பாடு, வெளிப்படைத்தன்மை தரநிலைகள் ஆகியவற்றை வலுப்படுத்த குழுமத்தின் நிர்வாகம் வைத்துள்ள கடப்பாட்டை இந்த மாற்றங்கள் வெளிப்படுத்துகின்றன,” என்று ஓலாம் குழுமம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

