சமூகத்தில் வருமுன் காக்கும், நாள்பட்ட நோய் கவனிப்புக்குக் கூடுதல் ஆதரவு வழங்க, 2027 ஜனவரியிலிருந்து மெடிசேவ் பயன்பாட்டுக்கான வரம்பு $500லிருந்து $700ஆக உயர்த்தப்படும்.
அதேபோல, சிக்கலான நாள்பட்ட நோயுடையவர்களுக்கான வரம்பு $700லிருந்து $1,000ஆக அதிகரிக்கப்படும்.
தற்போது இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தும் 910,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இது பயனளிக்கும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை (மார்ச் 5) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய அவர், நோயாளிகளில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினரின் வருடாந்தர மருத்துவக் கட்டணங்கள் தற்போதைய வரம்புகளைத் தாண்டியுள்ளதாகக் கூறினார்.
மேலும், தைராய்டு பிரச்சினை உடையோருக்குக் கூடுதல் ஆதரவு வழங்க, 2027 முதல் தைராய்டு மிகையியக்கம், தைராய்டு குறைவியக்கம் இரண்டையும் உள்ளடக்கும் வகையில், நாள்பட்ட நோயைச் சமாளிக்கும் திட்டத்தை சுகாதார அமைச்சு விரிவுபடுத்தும் என்று திரு ஓங் சொன்னார்.
தோல் அழற்சியையும் (எக்ஸீமா) இதில் சேர்க்க அமைச்சு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

