ஊழியரணியில் வலுவான சிங்கப்பூர் மையத்தை ஆதரிப்பதற்காக வெளிநாட்டு ஊழியர்களின் கொள்கைகள், பரிணமித்துவரும் பொருளியல் சூழலுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இந்த நோக்கத்திற்காக, ‘இபி’ (எம்ப்ளாய்மென்ட் பாஸ்) எனும் மேல்நிலை வேலை அனுமதிச் சீட்டுக்குக் குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் 5,600 வெள்ளியிலிருந்து 6,000 வெள்ளிக்கு உயர்த்தப்படும்.
‘இபி’ அட்டைதாரர்களின் தரத்தை இந்நடவடிக்கை கட்டிக்காப்பதாகப் பிரதமர் தம் உரையில் குறிப்பிட்டார்.
கூடுதல் சம்பளங்களை வழங்கும் நடைமுறையைக் கொண்டுள்ள நிதிச்சேவைத் துறையில் ‘இபி’ அனுமதிச்சீட்டுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் 6,200 வெள்ளியிலிருந்து 6,600 வெள்ளிக்கு உயர்த்தப்படும்.
மேற்கூறப்பட்ட மாற்றங்கள், ஜனவரி 2027 முதல் நடப்புக்கு வரும்.
இவற்றுக்கு ஒத்திசைவாக வயதில் மூத்த ‘இபி’ விண்ணப்பதாரர்களின் தகுதிச் சம்பளங்களும் உயர்த்தப்படும். புதுப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான இந்த மாற்றங்கள் 2028ல் நடப்புக்கு வரும்.
இதேபோல ‘எஸ்-பாஸ்’ வேலை அனுமதி அட்டை விண்ணப்பங்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் உயர்த்தப்படும் என்று பிரதமர் வோங் கூறினார்.
ஜனவரி 2027 முதல் புதிய எஸ்-பாஸ் விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச தகுதிநிலைச் சம்பளம் 3,300 வெள்ளியிலிருந்து 3,600 வெள்ளிக்கு உயர்த்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
நிதித்துறைக்கு இது $3,800லிருந்து $4,000க்கு உயர்த்தப்படும். இவற்றுக்கு ஒத்திசைவாக வயதில் மூத்த எஸ்-பாஸ் விண்ணப்பதாரர்களின் தகுதிச் சம்பளங்களும் உயர்த்தப்படும். புதுப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான இந்த மாற்றங்கள் 2028ல் நடப்புக்கு வரும்.
மேலும், வேலை அனுமதித் தீர்வையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று திரு வோங் தெரிவித்தார்.
கடல்சார், செயல்முறைப் பொறியியல் துறைகளில் தேர்ச்சி பெற்றுள்ள ஊழியர்க்கான (basic skilled workers) தீர்வைகள் முறையே 100 வெள்ளியாகவும் 150 வெள்ளியாகவும் உயர்த்தப்படும்.
அத்துடன், உற்பத்தி, சேவைத் துறைக்கான தீர்வைக் கட்டமைப்பு எளிமையாக்கப்படும் என்று திரு வோங் கூறினார்.

