தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலையக் கடைகளில் திருட்டு; இந்தியப் பெண் கைது

1 mins read
6805fb82-f478-4710-8c4c-ff5197ddf72a
சாங்கி விமான நிலையத்தில் உள்ள பயணிகள் விமானம் மாறும் பகுதிகள் ஒன்றில் உள்ள கடைகளில் மாது திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தில் 1,100 வெள்ளிக்கும் அதிக மதிப்புகொண்ட வாசனை திரவியப் புட்டிகளையும் நினைவுப்பொருள்களையும் திருடிய சந்தேகத்தின்பேரில் 62 வயது மாது கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு சில்லறை வர்த்தகக் கடைகளில் அப்பொருள்கள் காணாமற்போனது தங்களுக்குத் தெரிய வந்ததாகக் காவல்துறை புதன்கிழமையன்று (ஜனவரி 22) தெரிவித்தது.

சாங்கி விமான நிலையத்தின் பயணிகள் விமானம் மாறும் இடங்களில் ஒன்றில் இருக்கும் அக்கடைகளில் நிகழ்ந்த திருட்டு குறித்து சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.

கடை ஒன்றில் வேலை செய்த ஊழியர், மாது ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துகொண்டதைக் கவனித்தார். அந்த மாது கடைக்கு வந்த பிறகு எதுவும் வாங்காமல் புறப்பட்டதாக அந்த ஊழியர் தெரிவித்தார்.

அதன் றகு 1,121.60 வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் காணாமற்போனது தெரிந்தவுடன் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவைச் சேர்ந்த அம்மாதை விமான நிலையக் காவல்துறைப் பிரிவினர் கைதுசெய்தனர். அம்மாது சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படவிருந்த விமானத்தில் ஏறுவதற்கு முன்பு கைதுசெய்யப்பட்டார்.

அந்த மாது நான்கு வெவ்வேறு கடைகளுக்குச் சென்று பல்வேறு பொருள்களைத் திருடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. வியாழக்கிழமையன்று (ஜனவரி 23) அவர் மீது திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்