கொவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பிறகு, சாங்கி விமான நிலையம் வழியாக இடம்பெறும் பயணிகள் போக்குவரத்து மீண்டு வருகிறது.
சாங்கி விமான நிலையக் குழுமம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு அக்டோபரில் ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்து, கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த நிலையில் 90.7 விழுக்காட்டை எட்டியது.
மாதாந்தர விமானப் பயணிகள் போக்குவரத்து, கொரோனா பரவலுக்கு முன்பிருந்த நிலையில் 90 விழுக்காட்டைத் தாண்டியதும் இதுவே முதன்முறை என்று அக்குழுமம் குறிப்பிட்டது.
முன்னதாக, இவ்வாண்டு மே மாதம், பயணிகள் போக்குவரத்து 89.5 விழுக்காடு என்ற அளவிற்கு மீட்சி பெற்றிருந்தது. அதன்பிறகு, மீட்சி விகிதம் 90 விழுக்காட்டிற்குக் குறைவாகவே இருந்தது.
2023 அக்டோபர் மாதத்தில் 5.12 மில்லியன் பேர் சாங்கி விமானம் நிலையம் வழியாகப் பயணம் செய்தனர். கடந்த 2019 அக்டோபரில் 5.65 மில்லியன் பேர் அவ்விமான நிலையம் வழியாகப் பயணம் செய்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த அக்டோபரில் ஏறக்குறைய 28,700 விமானங்கள் சாங்கி விமானத்தில் தரையிறங்கின அல்லது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. 2019 அக்டோபர் நிலவரத்தை ஒப்புநோக்க, இது 89.8%.
சிங்கப்பூர் - தென்கொரியா இடையில் அதிகமானோர் பயணம் செய்தது அக்டோபரில் மீட்சி மேம்பட பெரிதும் உதவியது. கொவிட்-19 தொற்றுக்கு முன்பிருந்ததைவிட 36 விழுக்காடு அதிகமான பயணிகள் அவ்விரு நாடுகளுக்கு இடையே அக்டோபரில் பயணம் செய்தனர்.
அதாவது, 2023 அக்டோபரில் சிங்கப்பூர் - தென்கொரியா இடையே ஏறத்தாழ 209,000 பேர் பயணம் செய்தனர். 2019 அக்டோபரில் இந்த எண்ணிக்கை 153,000 பேராக இருந்தது.
இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் அவ்விரு நாடுகளுக்கு இடையே ஏறக்குறைய 1.8 மில்லியன் பேர் பயணம் செய்தனர். 2019 முதல் பத்து மாதங்களில் இந்த எண்ணிக்கை 1.32 மில்லியனாக இருந்தது.
2023 அக்டோபரில் சாங்கி விமான நிலையத்தின் முக்கியச் சந்தையாக இந்தோனீசியா திகழ்ந்தது. அம்மாதத்தில் சிங்கப்பூர் - இந்தோனீசியா இடையே 605,876 பேர் பயணம் செய்தனர்.