சாங்கி கடற்கரையில் பேரளவில் பிடிக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்களைச் சமைத்துக்கொடுத்த விவகாரத்தில், ஹேவ்லாக் பேலஸ் உணவகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளது.
விவகாரம் குறித்து அதிருப்திக் குரல்கள் எழுந்ததை அடுத்து, உணவகம் விசாரணை நடத்தியது.
இச்சம்பவம் நிகழ்ந்தது உண்மைதான் என்று விசாரணைக்குப் பிறகு உணவகம் தெரிவித்தது. அங்கீகரிக்கப்படாத வழிகளில் உணவுப்பொருள்களைப் பெற்றதற்காக அது வருத்தம் தெரிவித்தது.
மேலும், உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளைத் தீவிரப்படுத்தி உள்ளோம் என்றும் உணவக மேலாண்மை மற்றும் சமையலறை ஊழியர்களுக்குத் தகுந்த மறுபயிற்சி அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டது.
முன்னதாக, ஜூலை மாதம் 13ஆம் தேதியன்று சிலர் சாங்கி கடற்கரையில் நண்டுகள் உள்ளிட்ட பேரளவிலான கடல்வாழ் உயிரினங்களைப் பிடித்து உணவகத்துக்கு எடுத்துச் செல்லும் காணொளி வெளியானது.
இச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வெலரி லீ, இயற்கையையும் அதன் சுற்றுச்சூழல் அமைப்பையும் மதித்து நடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


