சிங்கப்பூரில் மானபங்கம் செய்ததாக ஆடவர் நால்வர்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் 16 வயதுப் பெண்ணைக் குறிவைத்த 77 வயது ஆடவர் என்று நம்பப்படுகிறது. அந்தப் பெண், வளர்ச்சி குறைபாடு, கடுமையான அறிவுசார் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
நண்பர் ஒருவரின் உறவினரான அந்தப் பதின்ம வயதுப் பெண்ணை கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி பிற்பகல் 1 மணிவாக்கில் ஆடவர் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதைக் கண்ட வழிப்போக்கர் இருவர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததாகவும் ஆடவர் பின்னர் கைதுசெய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
மற்றொரு வழக்கில் சக ஊழியரை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் 41 வயது ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 21 வயது ஊழியரை பழைய சுவா சூ காங் ரோட்டில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தும் அறையில் வைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஆடவர் மானபங்கம் செய்ததாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் மனவளர்ச்சிக் குறைபாடுள்ளவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு வழக்குகளும் இம்மாதத்தின் பிற்பாதியில் மீண்டும் விசாரணைக்கு வரும்.
மூன்றாவது வழக்கில் 28 வயது எம். சஞ்சீவ், 36 வயது பெண் ஓட்டுநரை மத்திய விரைவுச்சாலையில் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் இவ்வாண்டு ஜூன் 14ஆம் தேதி பின்னிரவு 3.30 மணியளவில் நடந்ததாகத் தெரிகிறது.
சம்பவத்தின்போது ஆடவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்று காவல்துறை குறிப்பிட்டது.
நான்காவது வழக்கில் ஈசூனில் உள்ள கூ டெக் புவாட் மருத்துவமனையில் 31 வயதுப் பெண் மானபங்கம் செய்ததாக நம்பப்படுகிறது.
கோ இயோக் ஹுவீ என்ற 54 வயது ஆடவர்மீது அது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இவ்வாண்டின் முற்பாதியில் மானபங்கம் தொடர்பில் 762 புகார்கள் பதிவாகின. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 739 சம்பவங்கள் பதிவாகின.


