தமது குடும்ப உறுப்பினர் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வந்த காவல்துறை அதிகாரியைக் கண்காணிக்க ஆடவர் ஒருவர் உரிமம் பெற்ற தனியார் புலன்விசாரணை முகவையின் சேவைகளை நாடினார்.
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி எந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திக்கொண்டிருந்தார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அந்த ஆடவருக்குத் தங்கள் தனியார் புலன்விசாரணைச் சேவைகளை வழங்க அந்த முகவையின் இரண்டு பங்குதாரர்களும் இணங்கினர்.
காவல்துறை அதிகாரியைக் கண்காணிக்க அவர்கள் நான்கு தனியார் புலனாய்வாளர்களை நியமித்தனர்.
காவல்துறை அதிகாரி அவரது வீட்டில் இருக்கும்போதும் அவரது வேலையிடத்தில் இருக்கும்போதும் அவரைக் கண்காணிக்கும் பொறுப்பு அவர்களிடம் தரப்பட்டது.
“சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி போலிஸ் கென்டோன்மண்ட் வளாகத்தில் பணியாற்றினார். உள்கட்டமைப்புப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அது ஒரு பாதுகாக்கப்பட்ட இடம். எனவே, தனியார் பாதுகாப்புத்துறைச் சட்டத்தின்கீழ் காவல்துறை ஒழுங்குமுறைத் துறையின் அனுமதியை தனியார் புலனாய்வாளர்கள் பெற்றிருக்க வேண்டும்
“இருப்பினும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியைக் கண்காணிக்கும் பணியை ஏற்றுக்கொண்ட அந்த இரு பங்காளிகளும் தேவையான அனுமதியைப் பெறவில்லை,” என்று காவல்துறை தெரிவித்தது.
வியாழக்கிழமையன்று (அக்டோபர் 30) அந்தத் தனியார் புலன்விசாரணை முகவையின் இரு பங்காளிகளான 32 வயது டான் ஹுயி டிங், 57 வயது டான் கோக் பூன் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் மீது மொத்தம் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

