சிங்கப்பூரில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 82,100ஐ எட்டியுள்ள நிலையில், அவற்றுக்கான மின்னூட்டு இடங்களின் எண்ணிக்கை 34,700ஆக உயர்ந்துள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) தெரிவித்துள்ளது. உலக மின்வாகனங்கள் தினமான புதன்கிழமையன்று (செப்டம்பர் 9) ஆணையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 4,000க்கும் மேற்பட்ட புதிய மின்னூட்டு இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2025ல் 57,200ஆக இருந்த மின்வாகன எண்ணிக்கை 2026 ஆகஸ்ட்டில் 82,100ஆக அதிகரித்தது.
2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட கார்களில் 63 விழுக்காடு மின்வாகனங்களாகும். இது கடந்த ஆண்டின் 45 விழுக்காட்டைவிட அதிகம். 2030க்குள் திட்டமிடப்பட்டுள்ள 60,000 மின்னூட்டு இடங்களில் 30,500க்கும் அதிகமானவை நிறுவப்பட்டுவிட்டதாகப் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் மே 6ல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சூ பெய் லிங்கின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
2027 இறுதிக்குள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பு வட்டாரம் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு விரைவு மின்னூட்டு இடத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல், கூடுதல் பதிவுக்கட்டணத் தள்ளுபடிக்கு வகைசெய்யும் மின்வாகன ஊக்குவிப்புச் சலுகை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


