‘சாட்ஜிபிடி’யை (ChatGPT) உருவாக்கிய ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம் இவ்வாண்டு இறுதிக்குள் சிங்கப்பூரில் அதன் அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
ஆக்ககரமான செயற்கை நுண்ணறிவு (generative artificial intelligence) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வருவதால் ஆசியாவில் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் இரண்டாம் அலுவலகத்தை திறப்பதாக அது தெரிவித்தது.
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவைத் தளமாகக் கொண்டு ஓப்பன்ஏஐ நிறுவனம் செயல்படுகிறது.
சிங்கப்பூரில் அலுவலகம் திறப்பதன் மூலம் உலக அளவில் நான்காவது அனைத்துலக அலுவலகத்தை ஓப்பன்ஏஐ திறந்துள்ளது.
வட்டார அளவில் இணைந்து செயலாற்றுவது, தேசிய செயற்கை நுண்ணறிவு திட்டத்தை மேம்படுத்துவது, தொழில்நுட்பத்தின் மூலம் தென்கிழக்காசியாவின் கலாசாராத்தையும் மொழியையும் புரிந்துகொள்வது உள்ளிட்டவற்றில் சிங்கப்பூர் அலுவலகம் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் அலுவலகம் திறப்பதன் மூலம் நாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வல்லுநர்களை தமது நிறுவனத்தால் ஈர்க்க முடியும் என்று ‘ஓப்பன்ஏஐ’ கூறியது. அதன்மூலம் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் சிங்கப்பூர் ஒரு நடுவமாக செயல்படும் என்றும் அது தெரிவித்தது.
சிங்கப்பூரில் அலுவலகம் திறப்பது குறித்து அக்டோபர் 9 (புதன்கிழமை) ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மன் அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டார்.

