அடுத்த பொதுத் தேர்தலில் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதியிலேயே தொடர்ந்து அங்கம் வகிப்பது குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்து உள்ளார்.
முதன்முதலாக, 2015 பொதுத் தேர்தலில் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக திரு சீ தேர்ந்து எடுக்கப்பட்டார்.
தொடர்ந்து, 2020 பொதுத் தேர்தலிலும் அவர் அதே தொகுதியில் வென்றார்.
இந்நிலையில், தோ பாயோவில் உள்ள வீவக நடுவத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) நடைபெற்ற சமூக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற திரு சீ, அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசினார்.
“பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதியில் கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக உள்ளேன். இங்குள்ள சமூகத்துக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தொடர்ந்து என்னால் சேவையாற்ற முடியும் என்று நம்புகிறேன்,” என்றார் இரண்டாம் நிதி அமைச்சருமான திரு சீ.
தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்ட நான்கு நாளில் அவரது கருத்து வெளியாகி உள்ளது.
தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த தேர்தலுக்கு எவ்வாறு தயாராக உள்ளீர்கள் என்று திரு சீயிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்வி எழுப்பியது.
அதற்குப் பதிலளித்த அவர், “பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதியில் அங்கம் வகிக்கும் எம்பிக்கள் தொகுதி எல்லைகள் மாறுமா என்பதை அறியக் காத்திருக்கிறார்கள். இருப்பினும், இந்தத் தொகுதியிலேயே தொடர்ந்து நீடிப்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தல் இவ்வாண்டு நவம்பருக்குள் நடத்தப்பட வேண்டும்.