பெண் குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பாக மரண விசாரணை நீதிமன்றம் கடுமையாக ஆராய்ந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே மாண்ட குழந்தையின் தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குழந்தையின் மரணம் தொடர்பாக அதன் பெற்றோர் அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குடன் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்படவில்லை.
இரண்டு மாதக் குழந்தையான நூர் மிஷா சியாய்ஃபா முஸ்டக்கிம் மாண்டுவிட்டதாக 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதியன்று அதைச் சோதித்துப் பார்த்த மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் உள்ள ஓர் அறை வீடு ஒன்றில் நிகழ்ந்தது.
குழந்தை மூச்சுவிட முடியாதபடி செய்து அதன் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாக குழந்தையின் தந்தையான முஸ்டக்கிம் ரோஸ்லி மீது கடந்த ஆண்டு மே மாதம் குற்றம் சுமத்தப்பட்டது.
அவருக்கு அப்போது 31 வயது.
தொடர்புடைய செய்திகள்
குழந்தையின் தாயார் அளித்த சாட்சியத்தை வைத்து முஸ்டக்கிம் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஆனால் தமது வாக்குமூலத்தை குழந்தையின் தாயார் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
குழப்பநிலையில், குடும்பம் பற்றி கவலை மேலோங்கி இருந்தபோது அவ்வாறு வாக்குமூலம் தந்ததாக அப்பெண் கூறினார்.
குழந்தைக்கு எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை என்று உடற்கூராய்வில் தெரியவந்தது.
அதன் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
குழந்தையின் மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்று காவல்துறை தெரிவித்தது.
குழந்தை துன்புறுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை மரண விசாரணை அதிகாரி ஒத்திவைத்துள்ளார்.
வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தன் கணவரை மணமுறிவு செய்யப்போவதாகவும் குழந்தையின் தாயார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

