சமூக இடம் ஒன்றில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் முதன்முறையான சேவை மார்ச் 3ஆம் தேதி தெம்பனிசில் தொடங்கியது. அதில் தற்போது இரண்டு குழந்தைகள் சேர்ந்துள்ளன.
தெம்பனிஸ் ஈஸ்ட் சமூக நிலையத்தில் 500 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இடத்தில் அமைந்துள்ள ‘எடுநேன்னி பை பட்லர்’, குழந்தை பராமரிப்பு குறித்து பெற்றோருக்குக் கூடுதல் தெரிவுகளை வழங்குவதற்கான முன்னோட்ட அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
இவ்வாண்டின் முற்பாதியில் நீ சூன் ஈஸ்ட் சமூக நிலையத்தில் இத்தகைய இரண்டாவது சேவையைத் தொடங்க ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
2024 டிசம்பர் 1ஆம் தேதி, இரண்டு முதல் 18 மாதக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்கான முன்னோட்டச் சேவையை வாரியம் தொடங்கியது.
இத்திட்டத்தின்கீழ், பராமரிப்பாளர்களின் இல்லங்களிலோ சமூக நிலையம் போன்ற சமூக இடம் ஒன்றிலோ குழந்தைகளைப் பராமரிப்பாளர்கள் பார்த்துக்கொள்கின்றனர்.
பொது விடுமுறை நாள்களைத் தவிர்த்து, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடையே ஐந்து அல்லது 10 மணி நேர அட்டவணையில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை வழங்கப்படுகிறது.
கட்டணக்கழிவுடன் கிடைக்கும் இத்தகைய சேவையின்படி, ஐந்து மணி நேரக் கவனிப்புக்கு $16.50 செலவாகும். இச்சேவையை முழுநேரமாகப் பயன்படுத்தும் பெற்றோர், மாதத்துக்கு பொருள், சேவை வரியுடன் $719.40 செலுத்துவர்.
இந்த முன்னோட்டத் திட்டத்தின்கீழ், ‘எடுநேன்னி பை பட்லர்’, ‘கிடிபிளிஸ்’, ‘நேன்னிபுரோ கேர்’ ஆகிய மூன்று நடத்துநர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளைக் கவனித்துக்கொள்வோரைப் பணியமர்த்துவது அவற்றின் பொறுப்பு.
தொடர்புடைய செய்திகள்
குழந்தைகளைப் பார்த்துக்கொள்வோரின் பின்னணியை தான் சரிபார்ப்பதாக வாரியம் அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிடுகிறது. அத்தகையோரிடம் குற்றப் பின்னணி ஏதேனும் உள்ளதா என்ற சரிபார்ப்பும் அதில் அடங்கும்.