சைனாடவுன் வட்டாரத்தில் ஒரு பெண்ணையும் அவரது ஆறு வயது மகளையும் கார் ஒன்று மோதியதில் அந்த ஆறு வயதுச் சிறுமி உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) காலை கிட்டத்தட்ட 11.50 மணிக்கு சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அந்த விபத்து நேர்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
விபத்துக்குள்ளான இருவரும் சுயநினைவுடன் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்தச் சிறுமி பின்னர் உயிரிழந்தார்.
இந்தோனீசியாவைச் சேர்ந்த 31 வயது தாயாரும் அவருடைய மகளும் சுற்றுப்பயணிகள் எனச் சீன மொழி நாளிதழான சாவ் பாவ் குறிப்பிட்டது. ‘புத்தா டூத் ரெலிக்’ எனும் பெளத்த ஆலயத்திற்குப் பக்கத்திலுள்ள கார் நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது.
விபத்தைக் காட்டும் புகைப்படங்கள் ‘எஸ்ஜி ரோட் விஜிலான்டே’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. ஓட்டுநர், வாகன நிறுத்துமிடத்திலிருந்து வளைந்து வெளியேறிய நேரத்தில் விபத்து நடந்ததாக அந்தப் பதிவின் தலைப்பு குறிப்பிட்டது.
சாலையோரத்தில் சிறுமியை ஆடவர் ஒருவர் தாங்கிப் பிடித்திருந்ததைப் புகைப்படம் ஒன்று காட்டியது.
விசாரணைக்கு 38 வயதுப் பெண் ஓட்டுநர் உதவுவதாகக் காவல்துறை தெரிவித்தது.

