சிங்கப்பூரில் சீன உணவுவகைகளை விற்கும் உணவகங்கள் அதிகரிப்பு

சிங்கப்பூரில் சீன உணவுவகைகளை விற்கும் உணவகங்கள் அதிகரிப்பு

2 mins read
8bf86035-b501-430c-b897-2623431d1f81
சீனாவில் 600க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள  உணவகங்களில் மிகப் பெரியவற்றுள் ஒன்றாகத் திகழும் ‘ஸிட்டா லாவ் தாய் தாய்’ (Xita Lao Tai Tai) நிறுவனத்தில் விற்கப்படும் இறைச்சி நூடல்ஸ் உணவு - படம்: ஷிடா லாவ் தாய் தாய்

சீனாவின் பல்வேறு பகுதிகளின் உணவுவகைகளைச் சிங்கப்பூரில் விற்கும் உணவக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உள்ளூரில் சீன உணவு நிறுவனங்களின் எண்ணிக்கை, 2024 மத்தியில் பதிவான 32லிருந்து 2025 ஆகஸ்ட்டில் 85ஆகக் கூடியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, அத்தகைய நிறுவனங்கள் 400க்கும் அதிகமான உணவகங்களை நடத்தி வருகின்றன.

வெளிநாடுகளில் செய்யப்படும் இந்த விரிவாக்கம் விரைவாக நடைபெற்றுள்ளது.

சீனாவின் தெற்கு மத்தியப் பகுதியில் உள்ள, குளிர்மிகு மலைப்பகுதியான ஹூனான் மாநிலத்தின் காரசாரமான சமையலை இப்போது சிங்கப்பூரர்களும் விரும்பி நாடுகின்றனர்.

கார உணவை விரும்புவோர், சிச்சுவான் மாநிலத்தின் மாலா என்ற கார உணவையும் சுவைக்க சிங்கப்பூரில் உள்ள பல உணவகங்களுக்குச் செல்கின்றனர். இந்த மாநிலத்தில் பிரபலமான கடுகுக்கீரையுடன் சமைக்கப்படும் சுவான்சீயூ மீன் உணவும் இங்கு விற்கப்படுகிறது.

சீன முஸ்லிம்கள் வாழும் வடமேற்கு மாநிலமான லான்சோவின் ‘இறைச்சி நூடல்ஸ்’ உணவும் சிங்கப்பூரில் விற்கப்படுகிறது.

சீனாவின் பல மாநில உணவுவகைகளை இங்குள்ள உணவகங்களில் சுவைக்க முடிவதோடு, இங்கு செயல்படும் ஸ்கார்லட் (Scarlett) பேரங்காடியின் 40க்கும் மேற்பட்ட கிளைகளிலிருந்து, சீனாவிலிருந்து தருவிக்கப்படும் உணவுப் பொருள்களையும் மக்கள் வாங்குகின்றனர்.

சீனாவின் தனி இணையக் கட்டமைப்பைக் கருத்தில்கொண்டு, சிங்கப்பூர், சீன நிறுவனங்களின் உலகளாவிய பார்வையையும் உயர்த்துகிறது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கை, அனைத்துலக விவகாரங்கள் திட்டத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் டிலான் லோ, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் அரிதாகவே அடையக்கூடிய பண்பாட்டுப் பரிமாணத்தை இத்தகைய சந்தை சார்ந்த விரிவாக்கம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“அரசாங்கத்தின் முயற்சிகளைச் சாராமல் தன்னிச்சையாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில், பல தனியார் தொழில்முனைவரும் வணிக நிறுவனங்களும் முன்னின்று செயல்படுகின்றனர்,” என்று பேராசிரியர் லோ கூறினார்.

“உணவு வழியான பன்னாட்டு உறவு என்பது முற்றிலும் உண்மையானது. மேலும், இது உலகெங்கிலும் பரவலாகச் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், அரசாங்கம் பெரும்பாலும் இந்த முறையில் தலையிடாமல் விலகி இருப்பதால், நாம் காண்பது மிகவும் நம்பகமானதாகவும் உண்மையானதாகவும் இருக்கிறது,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
சீனர்மாநிலம்உணவுவெளிநாட்டவர்