வட்ட ரயில்பாதை (CCL) உள்கட்டமைப்புப் பணிகள் இவ்வாண்டு ஜூலை மாதம் முழுமையாக நிறைவடையவுள்ளது.
இதுவரை அந்தப் பாதையில் பயணம் செய்த வண்டிகளில் அவை இறுதியாகச் சென்றடையும் நிலையங்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. உதாரணமாக டோபி காட், அல்லது ஹார்பர் ஃபிரண்ட் என்று நிலையங்களின் பெயர்கள் இருவழிப் பாதைகளில் எதிரெதிரே செல்லும் வண்டிகளில் காட்டப்பட்டன.
எனவே வட்டப் பாதையின் கட்டமைப்பு நிறைவடைந்ததும் வலது சுழற்சி முறையிலும் இடதுசுழற்சி முறையிலும் ரயில் செல்லும் பாதையின் விவரங்கள் வெளியிடப்படும். அதாவது கடிகாரத் திசை(Clockwise), எதிர்கடிகாரத்திசை (Anticlockwise) என்ற வகையில் ரயில் செல்லும் திசை பயணிகளுக்குத் தெரிவிக்கப்படும்.
இந்த வழிகாட்டி முறையை மக்கள் அதிகம் தேர்வுசெய்ததாக அது குறித்துக் பொதுக்கருத்துக் கணிப்பு நடத்திய நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
வட்டப்பாதை ஜூலையில் திறப்பதற்கு முன்பாக புதிய வழிகாட்டி முறைகளைப் பயணிகள் தெரிந்துகொண்டு பழக்கப்படுத்திக்கொள்ளும் விதமாக புரோமினாட், எஸ்பிளனேட், போனா விஸ்தா, பாயா லேபார் எம்ஆர்டி ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (மே 29) முதல் சீரமைக்கப்பட்ட வழிகாட்டிகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும் நிலையங்கள்
கெப்பல், கெண்டோன்மென்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு ஆகிய மூன்று ரயில் நிலையங்களும் பொதுமக்கள் பார்வைக்கு ஜூலை 4ஆம் தேதி திறந்துவிடப்படும். பிறகு, அவற்றில் பயணிகள் சேவை ஜூலை 12ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஹார்பர்ஃபிரண்ட் - மரினா பே நிலையங்களுக்கு இடையிலான இணைப்பு நிறைவுபெற்று வட்டப் பாதை முழுமையடையும்.

