பிடோக் நார்த்தில் ஒரு குப்பைத்தொட்டியில் கைவிடப்பட்ட குழந்தையைக் கண்டெடுத்த இரண்டு வெளிநாட்டு ஊழியர்களின் நற்செயல்களைப் பலரும் பாராட்டி வரும் வேளையில் அவர்களது நற்செயலை அங்கீகரித்து பாராட்டுச் சான்றிதழும் $500க்கான ஃபேர் பிரைஸ் பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.
பங்ளாதேஷைச் சேர்ந்த 24 வயதான திரு ஷமிம் பட்வாரி, 37 வயதான திரு முஸ்தஃபா கமால் ஆகிய அவ்விரு துப்புரவாளர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் தலைவர் இயோ குவாட் குவாங், நிலையத்தின் முதல் பாராட்டு விருதை பிடோக் நார்த் அவென்யூ 1ல் புளோக் 522ல் வழங்கினார்.
குழந்தையை இவ்விருவரும் காப்பாற்றியதைப் பற்றி தி நியூ பேப்பர் வெளியிட்ட செய்திதான் இந்த விருதை வழங்குவதற்கான முயற்சிக்கு உந்துதலாக அமைந்தது என்றார் அவர்.
வெளிநாட்டு ஊழியர்கள் தாமாக முன்வந்து மற்றவர்களுக்கு உதவிய சில சம்பவங்களையும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டு குழந்தை ஒன்றின் தலை துணி காயவைக்கும் கம்பிகளுக்கிடையில் சிக்கியதை மீட்க, வீடமைப்பு வளார்ச்சிக் கழக குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது மாடிக்கு ஏறி ஒரு வெளிநாட்டு ஊழியர் காப்பாற்றினார்.
“அத்தகைய நல்ல உள்ளங்களை அங்கீகரிப்பதுடன் இது போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கில்,” இந்த விருது வழங்கப்பட்டதாக திரு இயோ குறிப்பிட்டார்.
இல்லப் பணிப்பெண்களுக்கான நிலையத்துக்கும் தலைமை வகிக்கும் திரு இயோ, தேவைகள் ஏற்படும்போது தாமாக முன்வந்து உதவும் வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணிப்பெண்களுக்கு இத்தகைய விருதுகள் வழங்கப்படும் என்றார்.
தி நியூ பேப்பர் செய்தியாளர்களிடம் பேசிய திரு ஷமிம், திரு முஸ்தஃபா ஆகிய இருவரும் விருதைப் பெற்றதில் மகிழ்ச்சி என்றனர்.
எதையும் எதிர்பார்த்து அந்தச் செயலைச் செய்யவில்லை என்று கூறிய திரு ஷமிம், இந்தச் சம்பவம் குறித்து பங்ளாதேஷில் இருக்கும் தனது குடும்பத்தாரிடம் கூட சொல்லவில்லை என்றார்.
இந்த பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, தாயகத்தில் இருக்கும் தங்களது குடும்பத்தினருக்குத் தேவையான பொருட்களை வாங்கப்போவதாகத் தெரிவித்தனர் இருவரும்.
“அந்தக் குழந்தையைக் காப்பாற்றி சிங்கப்பூர் சமூகத்துக்கு எங்களால் இயன்றதைத் திருப்பிக் கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி. குழந்தையைக் காப்பாற்றியது விதியின் செயல்தான் என்று கூறவேண்டும். பொங்கிவழியும் குப்பைகளுக்கிடையே அந்தக் குழந்தையின் அழுகுரல் எங்கள் செவிகளில் விழாமலேகூட இருந்திருக்கலாம்,” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
#தமிழ்முரசு #குப்பைத்தொட்டியில்குழந்தை #வெளிநாட்டுஊழியர்கள் #விருது