சிங்கப்பூர் உல்லாசப் பயணக் கப்பல் நிலையத்தின் ஹார்பர்ஃப்ரண்ட் முனையத்திலிருந்து அருகிலுள்ள தீவுகளுக்குச் செல்வதை எளிமையாக்கும் வகையில் புதிய வசதிகள் பயன்பாட்டுக்கு வருகின்றன.
பயணிகள் படகில் ஏறுவதற்கு முன்னர் சுயசேவை இயந்திரங்கள் மூலம் தங்கள் பயணச்சீட்டுகளைத் தாங்களே அச்சிட்டு எடுத்துச் செல்லும் வசதியும் அறிமுகம் காண உள்ளது.
தற்போது அதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
அத்துடன், பயணத்தின்போது பசி எடுத்தால் அவர்களுக்கு விரிவான தெரிவுகள் இருக்கும். சப்வே போன்ற பிரபல உணவுக் கடைகளிலிருந்து பயணத்தின்போது தேவைப்படும் உணவை பயணிகள் பெறமுடியும்.
சிங்கப்பூர் உல்லாசக் கப்பல் நிலையம் அடுத்த இரு வாரங்களில் கட்டம் கட்டமாகச் செயல்படத் தொடங்கும்போது புதிய வசதிகளை பயணிகள் அனுபவிக்கலாம்.
கடப்பிதழ் சரிபார்ப்புக்கு அங்க அடையாளத்தைப் பயன்படுத்துவதும் அவற்றுள் அடங்கும்.
ஹார்பர்ஃப்ரண்ட் புதிய முனையத்தில் ஜூலை 7ஆம் தேதி முதல், சேவைகளைத் தொடங்கும் முதல் நிறுவனம் ‘பாத்தாம் ஃபாஸ்ட் ஃபெர்ரி’.
இதர நான்கு நிறுவனங்களான ஹொரைசன் ஃபாஸ்ட் ஃபெர்ரி, மெஜஸ்டிக் ஃபாஸ்ட் ஃபெர்ரி, சிண்டோ ஃபெர்ரி மற்றும் இண்டோ ஃபால்கன் ஷிப்பிங் அண்ட் டிராவல் ஆகியவையும் அனைத்துலக சொகுசுக் கப்பல் சேவைகளும் ஜூலை 15ஆம் தேதி சேவைகளைத் தொடங்க உள்ளன.
முனையத்தின் வழித்தடங்களிலும் பயணத்திற்கான கால அட்டவணைகளிலும் எந்த மாற்றமும் இருக்காது. மேலும் வழக்கமான படகுச் சேவைகளும் உல்லாசப் பயணச் சேவைகளும் வழக்கம் போல் இயங்கும். அவற்றின் இடைநிறுத்தங்களிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

