ஆக்ஸ்ஃபர்டு ரோடு சாலையிலுள்ள கூட்டுரிமை வீட்டில் அமளி ஏற்பட்டதன் தொடர்பில் 33 வயது ஆடவரும் 24 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
அந்த வீட்டில் மின் சிகரெட்டுகளையும் போதைப்பொருள் கருவிகளையும் காவல்துறையினர் கண்டனர்.
ரங்கூன் ரோட்டுக்கு அருகிலுள்ள அந்த வீட்டில் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் நான்கு மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாக ஷின்மின் நாளிதழ் தெரிவித்தது.
அதிகாரிகள் அங்கு சென்றிருந்தபோது வீட்டுக் கதவு பூட்டிருந்தது.
சம்பவத்தின்போது ஆறு காவல்துறை வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ உதவி வாகனம் ஆகியவற்றைச் செய்தியாளர்கள் கண்டனர்.
அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளில் சிலர் கவசக் கேடையங்களுடன் நின்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆணும் பெண்ணும் உறவில் இருந்ததாக ஷின்மின் நாளிதழ் கண்டறிந்தது.
ஏழாவது மாடியிலிருந்த அந்த வீட்டிலிருந்து வந்த பெருங்கூச்சலைக் கேட்டு கீழே நடந்துகொண்டிருந்தவர்கள் மேல் நோக்கிப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்க் காவல்துறையிலிருந்து பெறப்பட்ட அறிக்கை ஒன்றின்படி, உதவிக்கான அழைப்பு காலை 8.10 மணிக்குக் கிடைத்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
சம்பவ இடத்திற்குக் காவல்துறையினர் வந்தபோது அந்தப் பெண் துன்பத்தில் இருந்ததுபோலக் காணப்பட்டிருந்ததாக அவர்கள் கூறினர்.
சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அந்தப் பெண், பின்னர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினரைத் தங்கள் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தது, போதைப்பொருள் புழங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஆடவர் கைது செய்யப்பட்டார். விசாரணை தொடர்கிறது.

