200க்கும் மேற்பட்ட சமூக சேவைத் திட்டங்களுக்கு $16.7 மில்லியனுக்கு மேல் திரட்டிய சமூக உண்டியல் நிதி திரட்டு நிகழ்ச்சி

200க்கும் மேற்பட்ட சமூக சேவைத் திட்டங்களுக்கு $16.7 மில்லியனுக்கு மேல் திரட்டிய சமூக உண்டியல் நிதி திரட்டு நிகழ்ச்சி

3 mins read
bd1db4c1-f699-4dcb-85f2-f4d5d0c00d5b
உள்ளூர், அனைத்துலகக் கலைஞர்களுடன் அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவருடைய துணைவியார் ஜேன் இட்டோகி, மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர், உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

அறப்பணி நிகழ்ச்சி மூலம், 200க்கும் மேற்பட்ட முக்கிய சமூக சேவைத் திட்டங்களுக்கு சமூக உண்டியல் அமைப்பு $16.7 மில்லியனுக்கும் மேல் திரட்டியுள்ளது.

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகள், எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இளையோர், உடற்குறையுள்ள பெரியவர்கள், மனநலப் பிரச்சினைகள் உள்ளோர், உதவி தேவைப்படும் குடும்பங்கள், மூத்தோர் ஆகியோருக்கு ஆதரவு வழங்கும் திட்டங்கள் அவற்றில் அடங்கும்.

சமூக உண்டியலின் 40ஆம் ஆண்டு நிறைவுநாளை முன்னிட்டு மீடியாகார்ப்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ‘யுனைட்டிங் ஹார்ட்ஸ் 2023’ அறப்பணி நிகழ்ச்சியில் ஆடல், பாடல் எனப் பல அங்கங்கள் இடம்பெற்றன.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அதிபர் தர்மன் சண்முகரத்னமும், அவரது மனைவி ஜேன் இட்டோகியும், சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர், உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்கும் பங்குபெற்றனர்.

மேடையில் சக்கர நாற்காலியில் இருந்தபடி கூடைப்பந்து விளையாடிய கலைஞர் சேஸ் டான்னிடம் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பந்தைத் தூக்கி வீசுகிறார்.  
மேடையில் சக்கர நாற்காலியில் இருந்தபடி கூடைப்பந்து விளையாடிய கலைஞர் சேஸ் டான்னிடம் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பந்தைத் தூக்கி வீசுகிறார்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திரு தர்மன், மேடையில் சக்கர நாற்காலிகளில் கூடைப்பந்து விளையாடியவர்களில் ஒருவரிடம் பந்து ஒன்றையும் தூக்கி வீசினார்.

உள்ளூர்ப் பிரபலங்கள் உதய சௌந்தரி, சுவா என் லாய், ரஹிமா ரஹீம் ஒரே இசைக் கொண்ட மூன்று பாலர்ப் பாடல்களின் கலவையை நகைச்சுவையாக வழங்கினர். ‘மேண்டரின்’ மொழியிலேயே பொதுவாக வழங்கப்படும் இந்நிகழ்ச்சி, முதன்முறையாக பிற இன கலைஞர்களைச் சித்தரித்துள்ளது.

உள்ளூர்ப் பிரபலம் உதய சௌந்தரி முதன்முறையாக பிற இன கலைஞர்களைச் சித்தரித்த இந்நிகழ்ச்சியில் தன் இனிய குரலில் நன்கொடைத் திரட்டுக்குப் பங்களித்தார்.
உள்ளூர்ப் பிரபலம் உதய சௌந்தரி முதன்முறையாக பிற இன கலைஞர்களைச் சித்தரித்த இந்நிகழ்ச்சியில் தன் இனிய குரலில் நன்கொடைத் திரட்டுக்குப் பங்களித்தார். - படம்: சமூக உண்டியல்

“நல்ல விஷயத்திற்காக நடக்கும் இந்நிகழ்ச்சியைப் பார்த்து, மகிழ்ந்து மனதார நன்கொடையை வாரி வழங்கவேண்டும் என்பதற்காகக் கலந்துகொண்டேன். மற்ற ஒளிவளிக் கலைஞர்களோடு சேர்ந்து நிகழ்ச்சி படைக்கும் வாய்ப்புகளையும் நான் விரும்பி ஏற்கிறேன்.” என்றார் உதய சௌந்தரி.

‘ட்ரீஸ் ஆஃப் ஹோப்’ எனும் கடைசி அங்கத்தில் 54 வயது திருவாட்டி திலகராணியும் கலந்துகொண்டார்.

மருத்துவ காரணங்களினால் திருமதி திலகராணி அய்யாவு, 54, மற்றும் கணவரால் வேலைப் பார்க்க முடியவில்லை. 10 வயது மகளைத் தாங்கும் பொறுப்பு. அவரது வாழ்க்கைக் கதை காணொளியாக ஒளிபரப்பானது. mewatch.sg தளத்தில் மீண்டும் காணலாம்.
மருத்துவ காரணங்களினால் திருமதி திலகராணி அய்யாவு, 54, மற்றும் கணவரால் வேலைப் பார்க்க முடியவில்லை. 10 வயது மகளைத் தாங்கும் பொறுப்பு. அவரது வாழ்க்கைக் கதை காணொளியாக ஒளிபரப்பானது. mewatch.sg தளத்தில் மீண்டும் காணலாம். - படம்: சமூக உண்டியல்

சிறுநீரகச் செயலிழப்பினால் வாரத்தில் மூன்று முறை 4 மணி நேர இரத்தச் சுத்திகரிப்புக்காக சென்றுவருகிறார். அவரது கணவருக்கும் தோள்பட்டை, முட்டிப் பிரச்சினைகள். இருவராலும் வேலைக்குச் செல்ல இயலவில்லை. ஆனால், 10 வயது மகளைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு.

சமூக உண்டியலின் முந்தைய நிதி திரட்டுகள் இவருக்கு சிண்டா மூலம் பயனளித்துள்ளன.

சமூக உண்டியல் சிண்டா குடும்பச் சேவை நிலையத்திற்கு வழங்கிய நிதிவழி திருமதி திலகராணி பொருளாதார நிலையைச் சமாளிக்க ஆலோசனைகளும் மனநல ஆதரவும் பெற்றுவருகிறார்.

சமூக உண்டியல் நிதிவழி சிண்டா வழங்கும் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் திருமதி திலகராணி மருத்துவமனைக்குச் சென்றுவர பெரிதும் உதவிவருகின்றன.

சமூக உண்டியலின் நிதி, சிண்டா செயல்படுத்தும் ‘கோம்கேர்’ திட்டத்திற்கும் செல்கிறது. ‘கோம்கேர்’வழி ஒவ்வொரு மாதமும் நிதி பெற்றுவருகிறது இவரது குடும்பம்.

இது தவிர, மகளின் கல்வித் தேவைகளுக்கு சிண்டா, நிதி மற்றும் கல்வித்திட்டங்கள்வழி உதவி செய்துவருகிறது. முன்பு ‘கொவிட்’ தொற்று காலத்தில் அடிப்படைத் தேவைகளுக்காக சிண்டா, பராமரிப்பு, மீள்தன்மை நிதியும் கொடுத்தது.

“கணவரின் உடல்நலம், விலைவாசி உயர்வைப் பார்க்கையில் மகளுக்கு தேவைப்படுபவற்றை எப்படிக் கொடுப்பது என எப்போதும் மன உளைச்சல் அடைகிறோம்,” என்ற திருமதி திலகராணி, தொடர்ந்து நிதியுதவி தன் குடும்பத்துக்குத் தேவைப்படுவதாகக் கூறுகிறார்.

“எங்கள் பிரச்சினைகள் பலருக்கும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால் மருத்துவப் பிரச்சினைகளால் வேலைப் பார்க்க இயலவில்லை. பணக் கஷ்டம் தினமும் இருக்கிறது,” என்கிறார்.

“சில சமயங்களில் எங்களது குடும்பத்துக்கு என்னால் மூன்று வேளை உணவுகூடக் கொடுக்கமுடிவதில்லை. எங்கள் மகள் வளர்ந்துவருகிறார். அவர் ஏதேனும் கேட்டால் இல்லை என்று சொல்லவும் மனம் வரவில்லை. இதனால் மன அழுத்தமும் வருகிறது.”

“அதனால் அவள் விரும்புவதைக் கொடுக்க, அவளுக்கே தெரியாமல் ஓரிரு நாள்கள் நாங்களே உண்ணாமல் போவதுமுண்டு. அதனால் எங்களுக்கு உண்மையிலேயே உதவி மிகவும் தேவைப்படுகிறது.” என்றார் திருமதி திலகராணி.

தன் கதையைப் பகிர்வதன்மூலம் தன் குடும்பத்துக்கும், உதவி தேவைப்படும் பல குடும்பங்களுக்கும் நிதியுதவி கிடைக்கும் என நம்புகிறார்.

திருமதி திலகராணியின் வாழ்க்கைக் கதை நிகழ்ச்சியில் காணொளியாய் ஒளிபரப்பானது. நிகழ்ச்சியை https://www.mewatch.sg/show/Community-Chest-Uniting-Hearts-2023-405772 தளத்தில் மீண்டும் காணலாம்.

அக்டோபர் 1 வரைத் தொடர்ந்து https://www.comchest.gov.sg/campaigns-events/signature-events/Details/charity-tv-show-2023 இணையத்தளம்வழி நிதித் திரட்டு தொடரும்.

குறிப்புச் சொற்கள்