அமெரிக்கா சிங்கப்பூருக்கு விதித்துள்ள 10 விழுக்காட்டு வரியைச் சமாளிக்க இங்கிருக்கும் நிறுவனங்கள் மாற்று வழிகளை நாடவேண்டும்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தேசிய தினப் பேரணி உரை குறித்துத் தமிழ் முரசு ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் பங்கேற்ற வர்த்தகரும் சமூகத் தலைவருமான திரு ராஜகுமார் சந்திரா அந்தக் கருத்தை முன்வைத்தார்.
நிறுவனங்கள் ஆசியானிலும் ஆசியாவிலும் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிகளை எடுக்கவேண்டும் என்றார் அவர். காரணம், அமெரிக்காவின் வரி இப்படியே தொடருமா வேறு ஏதேனும் மாற்றம் வருமா என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது என்றும் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபையின் துணைத் தலைவருமான திரு ராஜகுமார் குறிப்பிட்டார்.
தமிழ் முரசின் கலந்துரையாடல் எஸ்பிஎச் அரங்கத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) பிற்பகலில் நடைபெற்றது. அதில் திரு ராஜகுமாருடன் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவி வைஷ்ணவி கண்ணனும் முதியோரின் பிரதிநிதியாகத் திரு நாகலிங்கம் வைரமுத்துவும் பங்கேற்றனர்.
மின்சிகரெட்டுகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறியிருப்பதைக் குமாரி வைஷ்ணவி வரவேற்றார். அவ்வாறு செய்வது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மின்சிகரெட் என்ற சொல்லைக் கேட்டாலே அது அச்சமாய் இருப்பதாகவும் வைஷ்ணவி சொன்னார்.
மூத்தோருக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டங்கள் மிகவும் பயன்தரும் என்றும் அத்தகைய திட்டங்கள் அவசியம் என்றும் திரு நாகலிங்கம் கூறினார்.
பிரதமரின் தேசிய தினப் பேரணி உரையில் இடம்பெற்ற மேலும் சில அம்சங்களிலும் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.