கேத்தே திரையரங்குகளை நடத்திய நிறுவனம் மசேநிதிக்குப் பணம் தரவேண்டும்

கேத்தே திரையரங்குகளை நடத்திய நிறுவனம் மசேநிதிக்குப் பணம் தரவேண்டும்

2 mins read
எம்எம்2, எம்எம்2 என்டர்டெய்ன்மென்ட் $213,000 வழங்கவேண்டியிள்ளது
fd8c22ce-5d39-4713-bb50-aa2a25dde633
கெத்தே திரையரங்குகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எம்எம்2 ஏ‌ஷியா நிறுவனமும் அது முழுமையாக உரிமை வகிக்கும் எம்எம்2 என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனமும் மத்திய சேமநிதிக்கு 213,000 வெள்ளியைத் தரவேண்டியுள்ளது.

எம்எம்2 ஏ‌ஷியா கிட்டத்தட்ட 15,000 வெள்ளியும் எம்எம்2 என்டர்டெய்ன்மென்ட் கிட்டத்தட்ட 198,000 வெள்ளியும் தரவேண்டியிருக்கிறது. புதன்கிழமை (செப்டம்பர் 16) அரசு நீதிமன்ற விசாரணையில் இது தெரிவிக்கப்பட்டது.

கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் பதிவுகளின்படி எம்எம்1 ஏ‌ஷியாதான் எம்எம்2 என்டர்டெய்ன்மென்ட்டில் முழுமையாக முதலீடு செய்துள்ள நிறுவனமாகும். எம்எம்2 என்டர்டெய்ன்மென்ட் விற்பனைக்கு விட்டுள்ள எல்லா இரண்டு மில்லியன் பங்குகளுக்கும் எம்எம்2 ஏ‌ஷியாதான் உரிமை வகிக்கிறது.

கெத்தே திரையரங்குகள்

எம்எம்2 ஏ‌ஷியா, கெத்தே சினிப்ளக்சஸ் திரையரங்குகளை நடத்திய நிறுவனமாகும். நிதிப் பிரச்சினைகள் காரணமாக கெத்தேயின் செயல்பாடுகள் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நின்றுபோயின.

திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பு மற்றும் விநியோகம், நேரடி நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியவற்றையும் எம்எம் ஏ‌ஷியா நடத்திவருகிறது. அது முழுமையாக உரிமை வகிக்கும் துணை நிறுவனமான எம்எம்2 என்டர்டெய்ன்மென்ட் 2009ல் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது.

மத்திய சேமநிதிக்குச் செலுத்தவேண்டிய பங்கைக் கட்ட கூடுதல் அவகாசம் தருமாறு அவ்விரு நிறுவனங்களையும் பிரதிநிதித்தவர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார். அவற்றின் நிதி நிலவரம் போன்ற காரணங்களை அவர் முன்வைத்தார்.

நிதிப் பற்றாக்குறை

“நிறுவனத்தில் நிதி இல்லை,” என்று அவர் புதன்கிழமை எம்எம்2 என்டர்டெய்ன்மென்ட்டுக்கான நீதிமன்ற விசாரணையின்போது தெரிவித்தார். செலுத்தவேண்டிய தொகையை அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து செலுத்த அந்நிறுவனம் பரிந்துரைப்பதாகவும் அவர் சொன்னார்.

பணத்தைத் தர அந்நிறுவனம் ஓர் ஏற்பாட்டைச் செய்துகொண்டுவருவதாகவும் இவ்வாண்டிறுதிக்குள் 15 மில்லியன் வெள்ளித் தொகை தங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எம்எம்2 என்டர்டெய்ன்மென்ட் மத்திய சேமநிதிக்குத் தரவேண்டிய சுமார் 198,000 வெள்ளித் தொகை அதிகமாக இருக்கிறது என்றும் ஜனவரி வரை காத்திருப்பதற்குப் பதிலாக அந்நிறுவனம் தொடர்ந்து தொகையைச் செலுத்திவரவேண்டும் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

எம்எம்2 ஏ‌ஷியாவைப் பொறுத்தவரை முன்னதாக நீதிமன்றம் விடுத்த உத்தரவைத் தொடர்ந்து 11,000 வெள்ளியைச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. அது இன்னும் 15,000 வெள்ளியைச் செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நீதிமன்றம்விசாரணைபணம்நிதிதிரையரங்குவர்த்தகம்