சிங்கப்பூரில் வீட்டு வாடகை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், சொத்து முதலீட்டாளர்கள் அதிக வாடகையை உடனடியாக சம்பாதிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கூட்டுரிமை வீட்டில் நடு நடுவே தடுத்து அதிக அறைகளை உருவாக்குகிறார்கள்.
அவற்றை வாடகைக்கு விடுகிறார்கள். பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்ஸ், ஈஸ்ட்பாய்ண்ட் கிரீன், சீமெய் கிரீன் காண்டோ, ரியோ விஸ்டா, ஆர்ச்சர்ட் பார்க் கொண்டோமினியம், தி செய்ல் ஆகியவற்றில் அமைந்துள்ள பல வீடுகள் பலவும் தங்கும் வசிப்பிடங்களாக மாற்றப்பட்டு இருப்பதாக சண்டே டைம்ஸ் தெரிவித்தது.
எடுத்துக்காட்டாக, சைனாடவுனில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்ஸில் இருக்கும் ஒரு மூவறை வீட்டில் மேலும் மூன்று படுக்கை அறைகள் சேர்க்கப்பட்டு அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக வாடகைக்கு கொடுக்கப்பட்டு உள்ளன.
அந்த வீடு 1,173 சதுர அடி பரப்புள்ளது. அது மாதம் சுமார் $4500 வாடகைக்கு முன்பு கொடுக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட மேலும் மூன்று அறைகளும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து வீட்டு உரிமையாளர் வாடகையாக மாதம் $8,000க்கும் அதிக தொகையை இப்போது பெறுகிறார்.
பிடோக்கில் கேசாஃபினா புளோக்கில் உள்ள மூவறை வீடு ஆறு அறை வீடாக்கப்பட்டு ஒவ்வோர் அறையும் $1,100 முதல் $1,800 வரை மாத வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.