கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலைகள் தொடர்ந்து ஐந்து மாதங்கள் அதிகரித்ததை அடுத்து, ஜனவரி மாதத்தில் இறங்கின.
இருப்பினும், வீட்டு விலைகள் நிலைப்பட்டு வருகின்றனவா என்பதை இப்போது உறுதிசெய்ய முடியாது என்று சொத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் மறுவிற்பனை வீட்டு விலை 0.8 விழுக்காடு சரிந்தது. ஒப்புநோக்க அதற்கு முந்திய மாதமான டிசம்பரில், அது 0.5 விழுக்காடு ஏற்றம் கண்டிருந்ததாக எஸ்ஆர்எக்ஸ் நிறுவனமும் 99.co என்ற நிலச்சொத்து இணையவாசலும் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டின.
வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகமாகவே இருந்துவருவதாக ஹட்டன்ஸ் ஏஷியாவின் தலைமை நிர்வாகி மார்க் யிப் கூறினார். கூட்டுரிமை மறுவிற்பனை வீடுகளை வாங்குவோர் அதற்கு அதிகம் செலவுசெய்ய தயங்குவதால் ஜனவரியில் வீட்டு விலைகள் மிதமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், முதன்மைப் பகுதிகளில் மறுவிற்பனை வீட்டு விலை தொடர்ந்து 1.4 விழுக்காடு அதிகரித்தது. புறநகர்ப் பகுதிகளில் அது 0.2 விழுக்காடு கூடியது.
சிங்கப்பூரின் முக்கிய மத்தியப் பகுதியில் அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக இஆர்ஏ சிங்கப்பூரின் நிர்வாக அதிகாரி யூஜின் லிம் கூறினார்.
நகர்ப்புறப் பகுதிகளில் மறுவிற்பனை விலைகள் 0.6 விழுக்காடு சரிந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலைகள் 7.2 விழுக்காடு அதிகரித்ததாகப் புள்ளிவிவரங்கள் காட்டின.
குறைவான எண்ணிக்கையில் கூட்டுரிமை வீடுகள் கட்டப்படவுள்ளதால், வீட்டு விலைகள் தொடர்ந்து இவ்வாண்டு அதிகரிக்கக்கூடும் என்று ஆரஞ்சு டீ குழுமத்தின் தலைமை ஆய்வாளர் கிறிஸ்டின் சன் கூறினார்.