சைனாடவுன், பாசிர் ரிஸ் வட்டாரங்களில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) நடத்திய தேடுதல் வேட்டையில் இருவர் பிடிபட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரிடமிருந்து இரண்டு கிலோ ஹெராயினையும் மற்றொருவரிடமிருந்து 1.3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் வேறு சில போதைப்பொருள்களும் வைத்திருந்தனர் என்றும் அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகக் கூறப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) வெளியிட்ட அறிக்கையில், ரொக்கமும் $254,000க்கும் அதிகமான பெறுமானமுள்ள போதைப்பொருள்களையும் தேடுதல் வேட்டையின்போது அதிகாரிகள் கைப்பற்றியதாகக் குறிப்பிட்டது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள், ஒரு வாரத்திற்கு ஏறத்தாழ 1,200 போதைப்புழங்கிகள் உட்கொள்வதற்குப் போதுமானவை என அந்த அறிக்கை தெரிவித்தது.
15 கிராமுக்குமேல் தூய ஹெராயின், 250 கிராமுக்குமேல் ஐஸ் அல்லது 500 கிராமுக்குமேல் கஞ்சா கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்கப்படலாம்.
விசாரணை தொடர்வதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கூறினர்.