லிட்டில் இந்தியாவின் சந்தர் சாலையில் அமைந்துள்ள சித் பீத் ஸ்ரீ லெட்சுமி நாராயண் ஆலயம் 56 ஆண்டுகளில் அதன் முதல் குடமுழுக்கு விழாவைப் புதன்கிழமை (பிப்ரவரி 25) கொண்டாடியது.
ஏழு ஆண்டுகால விரிவான புதுப்பிப்புக்குப் பின் ஆலயத்தின் குடமுழுக்கு இடம்பெறுகிறது.
சிங்கப்பூரில் வளர்ந்துவரும் வட இந்திய இந்து சமூகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வரலாற்றுபூர்வ சித் பீத் ஸ்ரீ லெட்சுமி நாராயண் ஆலயத்தில் கூடுதலாக 4,000 சதுர அடி இடம் சேர்க்கப்பட்டுள்ளது.
புதுப்பிப்புப் பணிகளுக்குச் செலவுசெய்யப்பட்ட கிட்டத்தட்ட $3 மில்லியன் தொகை, முழுக்க முழுக்க சமூகத்திடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டவை.
1969ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சித் பீத் ஸ்ரீ லெட்சுமி நாராயண் ஆலயம், 1989ஆம் ஆண்டு நகர மறுசீரமைப்பு வாரியத்தால் மரபுடைமைத் தளமாக அரசிதழில் சேர்க்கப்பட்டது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழாவைக் கொண்டாடும் தென்னிந்திய ஆலயங்களைப் போல அல்லாமல் வட இந்திய ஆலயங்களில் குடமுழுக்கு நடைபெறுவது அரிது.
எனினும், அண்மையில் நடந்துமுடிந்த புதுப்பிப்புப் பணிகளை அடுத்து, ஆலயத்தின் சக்தியை மெருகேற்றும் வகையில் குடமுழுக்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக சித் பீத் ஸ்ரீ லெட்சுமி நாராயண் ஆலயத்தின் தலைவர் பல்ராம் சாவ்பே கூறினார்.
“புதுப்பிப்பின்போது ஆலயத்தில் இருந்த சில விக்ரகங்களை உரிய இடங்களிலிருந்து அப்புறப்படுத்தி மீண்டும் அந்தந்த இடங்களில் பதிக்க வேண்டியிருந்தது. எனவே விக்ரகங்களின் சக்தியை மெருகேற்ற ஆலயத்தில் குடமுழுக்கை நடத்தினோம்,” என்றார் திரு சாவ்பே.
தொடர்புடைய செய்திகள்
குடமுழுக்கு விழாவுக்கான ஆயத்தங்கள் பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கியதாக ஆலயத்தின் இரண்டாம் தலைமுறை அறங்காவலர் பெர்டிட் திவாரி கூறினார்.
பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு ஏறக்குறைய 1,500 பக்தர்கள் திரண்டனர். டிபிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பியுஷ் குப்தா ஆகிய முக்கிய பிரமுகர்களும் அதில் அடங்குவர்.
தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் குடமுழுக்கைத் தொடங்கி வைத்தார்.
ஆலயத்தில் புதுப்பிப்புப் பணிகளைச் செய்ய இந்தியாவின் ஜெய்ப்பூரிலிருந்து கட்டட வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டனர். உள் கருவறையின் கதவின் ஓரங்களில் தங்கத் தகடுகளால் ஆன சட்டம் பொருத்தப்பட்டது.
பளிங்குத் தரைகள் பளபளப்பாக்கப்பட்டன. கடவுள் சிலைகளுக்கு மேல் வெள்ளிக் குடைகள் நிறுவப்பட்டன.

