டேங்க் ரோட்டில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் குடமுழுக்கு ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு ஜூனில் தொடங்கிய ஆலயப் புதுப்பிப்புப் பணிகள் தற்போது நிறைவுபெறும் கட்டத்தில் உள்ளன. குடமுழுக்கு தினத்தன்று கிட்டத்தட்ட 15,000 பக்தர்களை வரவேற்க ஆலயம் தயாராகி வருவதாக கோயிலின் நிர்வாகக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
மே 13 நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்கள் இந்த விவரங்களைப் பகிர்ந்தனர்.
பக்தர்களுக்கு உணவு பரிமாறுவதற்காக 1,000 இருக்கைகளுக்கான இடவசதி உடைய கூடாரம் ஒன்று ரிவர் வேலி ரோட்டிலுள்ள திறந்தவெளியில் அமைக்கப்படும். முதியோருக்கும் உடற்குறையுள்ளோருக்கும் சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
குடமுழுக்குக்காக 1,000 தொண்டூழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். வானிலை நிகழ்வு, அவசரநிலை சூழலுக்கும் அவர்கள் ஆயத்த நிலையில் இருப்பதாக ஆலய நிர்வாகக் குழுவினர் கூறினர்.
பிரதமர் லீ சியன் லூங் குடமுழுக்கு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. அவருடன் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், கலாசார, சமூக இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா ஆகியோரும் வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது. 2009ல் இக்கோயிலில் கடைசியாக குடமுழுக்கு நடத்தப்பட்டது. 165 ஆண்டு பழமைவாய்ந்த இந்தக் கோயில், 2014ல் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பிறகு நடத்தப்படும் முதல் குடமுழுக்கு இது.
2020ல் புதுப்பிப்புப் பணிகளுக்கு திட்டமிட்டபோது பக்தர்கள், ஆலயத் தொண்டர்கள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி அவர்களது கருத்துகளையும் யோசனைகளையும் கருத்தில்கொண்டதாக ஆலய நிர்வாகக் குழு தெரிவித்தது. ஆலயத்தின் புதுப்பிப்புப் பணிகளுக்கான செலவு சுமார் $1 மில்லியன்.
ஆலயத் தூண்களிலும் சந்நிதிகளிலும் ஐந்து நிறங்களால் ஆன ஐவண்ணச் சாயங்கள் பூசப்பட்டுள்ளன. அத்துடன், ஆலயத் தரையில் தாமரை வடிவங்களுக்கான கற்கள் பளிங்கில் இருந்து ‘கிரேனைட்’டாக மாற்றப்பட்டுள்ளன. ஆலயத்திற்குள் தெய்வத் திருவுருவங்களைக் கொண்ட 48 கண்ணாடிச் சன்னல்களும் மாற்றப்பட்டுள்ளன.
ஆலயத்தின் திருமண மண்டபமும் மடப்பள்ளியும் தற்போது விரிவுவாக்கம் காண்பதாகவும் அதற்குரிய பணிகள் ஆண்டிறுதிக்குள் நிறைவேறும் என்றும் கட்டடக்குழு உறுப்பினர் ச.வெங்கடாசலம், 54, தெரிவித்தார்.
திருமண மண்டபம், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினரின் செறிவுமிக்க பாரம்பரிய கலைக்கூறுகள் நிறைந்த அழகிய உட்புறத்துடன் அதிநவீன ஒலி, ஒளி வசதிகளைக் கொண்டிருக்கும்.
“மண்டபத்தின் பார்வையாளர் பகுதி ஓர் அடுக்கிற்குப் பதிலாக ஈரடுக்குகளைக் கொண்டிருக்கும். பழைய மண்டபத்தில் 500 பேர் வரை திருமணத்தை அமர்ந்து காண முடிந்தது. ஆனால், புதிய மண்டபத்தில் 700 பேர் வரை அமரலாம்,” என்று திரு வெங்கடாசலம் கூறினார்.
குடமுழுக்கிற்காக டேங்க் ரோடு மே 31ஆம் தேதி இரவு 9 மணி முதல் ஜூன் 1 ஆம் தேதி இரவு 9 மணி வரை மூடப்பட்டு இருக்கும். கிளமென்சியூ அவென்யூ, ரிவர் வேலி ரோடு ஆகியவை பின்னிரவு 1 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும்.
பக்தர்களுக்கான உணவு காலை 10 மணியிலிருந்து பரிமாறப்படும் என்று கூறிய ஆலயத் தலைவர் எம்.சாமிநாதன், குடமுழுக்கை நேரில் சென்றுகாண முடியாதவர்கள் இணையம் மூலம் நேரலையில் காணலாம் என்றும் கூறினார்.