சிங்கப்பூரின் ஆகப் பழைமையான பொது நூலகமான குவீன்ஸ்டவுன் நூலகம் ஈராண்டுகால புதுப்பிப்புப் பணிகளுக்காக 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மூடப்படும்.
தேசிய நூலக வாரியம் அதன் நூலகங்களுக்காக மேற்கொள்ளும் உருமாற்றத் திட்டங்களின் ஓர் அங்கமாக அந்தப் புதுப்பிப்புப் பணி நடைபெறும்.
குவீன்ஸ்டவுன் பொது நூலகம் அதன் இடங்களையும் சேவைகளையும் புதுப்பிக்க, பெரிய அளவிலான மறுவடிவமைப்புக்கு உள்ளாகிறது. நீடித்த நிலைத்தன்மை, நல்வாழ்வு தொடர்பான அம்சங்களும் அதில் உள்ளடங்கும் என்று வாரியம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
மார்கரட் டிரைவில் இரண்டு மாடிக் கட்டடத்தில் அமைந்துள்ள குவீன்ஸ்டவுன் நூலகம் 1970ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு 1984ஆம் ஆண்டும் 2003ஆம் ஆண்டும் அங்கு சில மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றன.
அது 2013ஆம் ஆண்டில் பாதுகாக்கப்படவேண்டிய கட்டடமாக அறிவிக்கப்பட்டது. அதனால் அதன் வெளிப்புறத் தோற்றத்தை மாற்றமின்றிப் பராமரிப்பது அவசியம்.
வழிகாட்டி முறைகளைப் பின்பற்றும் அதே வேளையில், அதன் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பிலும் சேவைகளிலும் நூலகத்தின் மரபுடைமையை சேர்த்துக்கொள்ளவிருப்பதாக வாரியம் கூறியது.
திட்டத்திற்கான விரிவான வடிவமைப்புகள் தயாரானதும், 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிலிருந்து 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டுவரை கட்டுமானப் பணிகளுக்கான குத்தகையை அறிவிக்கப்போவதாக வாரியம் கூறியது.