மத்திய விரைவுச் சாலையின் (சிடிஇ) இரு வெளியேறும் வழிகள் கட்டுமானப் பணிகள் காரணமாக ஜூலை மாத இறுதியில் சில நாள்களில் சில மணிநேரம் தற்காலிகமாக மூடப்படும்.
தீவு விரைவுச் சாலையுடன் இணைக்கும் புதிய நடைபாதை, சைக்கிள் பாதைக்கான கட்டுமானப் பணிகளை முன்னிட்டு அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஜூலை 28 முதல் 31 வரை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அந்த வெளியேறும் வழிகள் மூடப்பட்டிருக்கும் என்று நகர சீரமைப்பு ஆணையம் புதன்கிழமை (ஜூலை 22) தெரிவித்தது.
துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையை இணைக்கும் மத்திய விரைவுச் சாலையின் 8A வெளியேறும் வழி ஜூலை 28 முதல் 31 வரை நான்கு நாள்களுக்கு மூடப்படும்.
அப்பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மத்திய விரைவுச் சாலையின் 7C வெளியேற்றத்தைப் பயன்படுத்தி மோல்மீன் ரோடு, தாம்சன் ரோடு வழியாகப் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
அப்பர் சிராங்கூன் ரோட்டை இணைக்கும் மத்திய விரைவுச் சாலையின் 8B வெளியேறும் வழி ஜூலை 28, ஜூலை 31 ஆகிய இரு நாள்களுக்கு மூடப்படும். வாகன ஓட்டிகள் பிரேடல் ரோட்டைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்ட எச்சரிக்கை பலகைகளும் தடுப்புகளும் வைக்கப்படும்.

