காவல்துறை அதிகாரி ஒருவர் மீது திருட்டு, நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.
ஆரிஸ் ரிஸ்கி நஸ்மி, 42, எனப்படும் அந்த அதிகாரி நான்கு காவல்துறை வாகனங்களைத் தவறாகக் கையாண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் அவற்றுள் அடங்கும்.
அவரது பெரும்பாலான குற்றங்கள் காவல்துறையின் கேன்டன்மெண்ட் வளாகத்தில் நிகழ்த்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
2023 நவம்பர் 21க்கும் 2024 ஜூலை 8க்கும் இடைப்பட்ட நாள்களில் $985 பணத்தை ஆரிஸ் முறைகேடாகக் கையாடியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காவல்துறைக்குச் சொந்தமான இரண்டு ரொக்க அட்டைகளை அவர் 2024 மே 9ஆம் தேதிக்கும் மே 13ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் சட்டவிரோதமாகக் கையாண்டதாக ஒரு குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.
அந்த ரொக்க அட்டைகளில் கிட்டத்தட்ட நான்கு வெள்ளி தொகை இருந்தது.
இவை தவிர, 2024 பிப்ரவரி 16க்கும் மே 14க்கும் இடைப்பட்ட நாள்களில் காவல்துறையின் நான்கு வாகனங்களை 14 முறை அந்த அதிகாரி தவறாக பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவை எந்த மாதிரியான வாகனங்கள் என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
கேன்டன்மண்ட் வளாகத்தில் இருந்த காவல்துறை வாகன நடமாட்டப் பதிவுப் புத்தகத்தை 2024 மே 14ஆம் தேதி திருடியதாகவும் ஆரிஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
மறுவிசாரணைக்காக அவரது வழக்கு அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.