2003ஆம் ஆண்டின் 'சார்ஸ்' (SARS) நிலவரத்தை ஒப்பிடுகையில், இன்றைய கொரோனா கிருமித்தொற்றின் நிலவரம் விமானத் துறையை இன்னும் அதிக அளவில் பாதிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்தார்.
இதை அவர் நேற்று (பிப்ரவரி 6) சாங்கி விமான நிலையத்திற்கு சென்றிருந்தபோது குறிப்பிட்டார்.
இன்று சீனா மிகப் பெரிய சந்தையாகவும் சிங்கப்பூரிலும் வட்டார அளவிலும் சுற்றுப்பயணத்திற்கு பங்களிக்கும் முக்கிய நாடாகவும் உருவெடுத்துள்ளதால் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது என்றார் அவர்.
ஒட்டுமொத்த சாங்கி விமான நிலைய சில்லறை வர்த்தக விற்பனையில், மூன்றில் ஒரு பங்கினர் சீன நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஆவர்.
இதை கருத்தில் கொண்டு, தமது வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் இத்துறைக்கு ஆதரவு வழங்கும் வகையில் சில திட்டங்களை இம்மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.
சாங்கி விமான நிலைய சில்லறை வர்த்தக துறையில் பணியாற்றும் கிட்டத்தட்ட 8,000 ஊழியர்கள் மீது அக்கறை கொள்வதாகக் கூறிய அமைச்சர் கோ, அப்படி அங்கு வர்த்தகம் தொடர்ந்து பாதிப்படைந்தால், நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபடக்கூடும் என்றும் நிறைய குடும்பங்கள் இதனால் பாதிப்படையும் என்றும் விளக்கினார்.
"சார்ஸ் பருவத்தில், சீனப் பயணிகளின் சாங்கி விமான நிலைய வருகை 5% ஆக இரு ந்தது. தற்போது அது 11% ஆக உள்ளது. அவர்களின் பணம் கொடுத்து வாங்கும் திறனும் கூடியுள்ளது. சாங்கி விமான நிலைய சில்லறை வர்த்தக துறை விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு சீன நாட்டை சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் வர, தற்போது அந்த நிலை மாறிவிட்டது," என்று கூறினார் அமைச்சர் கோ.
'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்', 'ஸ்கூட்', 'சில்க் ஏர்' ஆகிய உள்ளூர் விமான நிறுவனங்களும் பாதிப்படைந்துள்ளன என்றார் அவர்.
மேலும், சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமானச் சேவை பயணங்களின் எண்ணிக்கை சுமார் 70 விழுக்காடு சரிந்துள்ளது என அமைச்சர் கோ சொன்னார்.