கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட எம்எஸ் வெஸ்டெர்டாம் கப்பலில் இருந்த இரண்டு சிங்கப்பூரர்கள் சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அந்தக் கப்பலிலிருந்து வேறு பயணிகள் யாரும் சிங்கப்பூருக்குள் அனுமதி இல்லை.
“அவ்விரு பயணிகளும் அரசாங்க தனிமைப்படுத்தப்படும் வளாகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கப்பலில் பயணம் செய்த வேறு யாரும் சிங்கப்பூருக்குள் வரவோ அல்லது சிங்கப்பூர் வழியாக வேறு இடத்துக்குப் பயணம் செய்யவோ அனுமதி இல்லை,” என்று கொரோனா கிருமிப் பரவலைக் கையாளும் அமைச்சர்கள் நிலை பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான திரு லாரன்ஸ் வோங் நேற்று (பிப்ரவரி 17) குறிப்பிட்டார்.
அந்தக் கப்பலிலிருந்து விமானம் மூலம் கோலாலம்பூருக்குச் சென்ற அமெரிக்கப் பெண் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பதை மலேசியா உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சிங்கப்பூரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹாங்காங்கிலிருந்து இம்மாதம் முதல் தேதி புறப்பட்ட அந்தக் கப்பலுக்கு ஐந்து துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, கடந்த இரு வாரங்களாக அது கடலிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சுமார் 2000 பயணிகள், ஊழியர்களுடன் இருந்த அந்தக் கப்பல் கம்போடியாவின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் மீது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லாததை உறுதிப்படுத்திய கம்போடிய அதிகாரிகள், அவர்கள் மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதி அளித்தனர்.
#MS Westerdam #Corona #தமிழ்முரசு #Cambodia