கட்டுமான நிறுவன வர்த்தகத்தைப் பெருக்குவதற்காகக் கூட்டுரிமை வீடுகளை நிர்வகிப்போருக்கும் சொத்துச் சந்தை மேலாளர்களுக்கும் கையூட்டு வழங்கிய குடும்பத்தின்மீது நீதிமன்றத்தில் (ஜூன் 26) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஓங் சின் கீ, 66, அவரது மனைவி லியா லம் மோய், 66, அவர்களின் இரு மகன்கள் ஜோவி ஓங் டெங் ஹொங், 36, ஓங் வெய் ஹாவ், 30 ஆகிய நால்வர்மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
ஒவ்வொருவரும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 17 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.
சிங்கப்பூரர்களான அந்த நால்வரும் 2018ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் குற்றங்களைப் புரிந்ததாக ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவு குறிப்பிட்டது. அவர்கள் $56, 260 கையூட்டு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் நடத்தும் ஓசிஎல் (OCL) கட்டுமான நிறுவனம் கட்டடக் கட்டுமானம் முக்கிய மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை செய்கிறது. அதோடு சாயம் பூசுவது, அலங்கரித்தல் போன்ற வேலைகளையும் நிறுவனம் ஏற்கிறது.
கையூட்டுப் பெற்றதாக ஐவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்களுள் தாம்சன் வியூ கூட்டுரிமை வீடுகள், தெலுக் குராவ்வில் உள்ள த கோட்ஸ் (The Cotz) கூட்டுரிமை வீடுகள் ஆகியவற்றின் நிர்வாகி 31 வயது லிம் பெய் சியொங்கும் அடங்குவார்.
அந்த மலேசிய ஆடவர் $23,500 கையூட்டு வாங்கிய குற்றத்தை எதிர்நோக்குகிறார். இரண்டு கூட்டுரிமை வீடுகளிலும் ஓசிஎல் நிறுவனத்துக்குச் சாதகமாகப் பணிகளைத் தருவதற்காக அவர் கையூட்டுப் பெற்றதாக நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரரான 71 வயது தேவ சுந்தரம் மீது 4 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகின.
ஆடவர், 2019ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை $20,260 கையூட்டு வாங்கியதாகக் கூறப்படுகிறது. அவர் தங்கிளினில் உள்ள லேடிஹில் கூட்டுரிமை வீடுகளின் நிர்வாகியாக இருந்தார்.
ஊழல் தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால் $100,000 வரை அபராதம், ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.