அரசாங்க ஒப்பந்தப்புள்ளி ஒன்றில் ஊழல் செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆடவர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் திங்கட்கிழமை (மார்ச் 9) மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
ஹூ சியோங் ஹாவ், 43, லிம் சீ ஹவ் நிக்கோலஸ், 45, ஆகிய இருவர்மீதும் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தலா இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இரு ஆடவர்களும் எந்த அரசாங்க ஒப்பந்தப்புள்ளியைக் கையாண்டனர் என்பது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
2016ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடையில் தவறு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அப்போது ஹூ ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். லிம் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக இருந்தார்.
லிம் லஞ்சமாக 125,000 பெற்று ஹூவின் நிறுவனத்திற்கு உதவியதாக நம்பப்படுகிறது.
லஞ்சக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஒருவருக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம், ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கம் தொடர்புடைய ஊழலாக இருந்தால் ஒவ்வொரு குற்றத்திற்கும் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் மீண்டும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

