விலைவாசி உயர்வைச் சமாளிக்கும் பொருட்டு, 21 வயதும் அதற்குமேல் உள்ள சிங்கப்பூரர்களுக்கு உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்தின்கீழ் சிறப்பு உதவித்தொகையாக ஒருமுறை மட்டும் 200 வெள்ளி முதல் 400 வெள்ளி வழங்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.
இன்று (14-02-2023) நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது நிதியமைச்சருமான வோங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், மூத்தோருக்கு உதவும் விதமாக, 55 வயதும் அதற்கு மேற்பட்ட, தகுதியுள்ள சிங்கப்பூரர்களுக்கு $200 முதல் $300 வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் குடும்பங்களுக்கான யு-சேவ் கட்டணக் கழிவு இரட்டிப்பாகிறது. தகுதிபெறும் குடும்பங்கள் இவ்வாண்டு 760 வெள்ளி வரையிலான யு-சேவ் கட்டணக் கழிவை எதிர்பார்க்கலாம்.
அத்துடன், பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களுக்கும் உதவி வழங்கப்படுகிறது. ஆறு வயதும் அதற்கும் கீழுள்ள பிள்ளைகளின் குழந்தை மேம்பாட்டுக் கணக்கில் 400 வெள்ளி செலுத்தப்படும்.
ஆறு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளின் எடுசேவ் கணக்கில் அல்லது உயர்நிலைக் கல்விக்குப் பிந்திய கணக்கில் $300 செலுத்தப்படும் என்றும் திரு வோங் அறிவித்துள்ளார்.

