பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுதிரள வேண்டும்: அதிபர் தர்மன்

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுதிரள வேண்டும்: அதிபர் தர்மன்

2 mins read
3f19811e-36be-4624-bcd6-4cdae85c00e9
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சமாளிக்க உலகளாவிய அரசியல் ஆதரவு தேவை என்று அதிபர் தர்மன் வலியுறுத்தியுள்ளார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உலக நாடுகள் அரசியல் ரீதியான பேராதரவை வழங்க வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தியுள்ளார்.

நிலையான வளர்ச்சியை எட்டுவதில் பருவநிலை மாற்றமே உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும். இதற்கு, மிகவும் அவசரமான, தெளிவான, ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவை என்று வியாழக்கிழமை ( ஜூன் 18) அவர் கூறினார்.

‘லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’ பல்கலைக்கழகத்தின் உலகளாவிய நிலைத்தன்மைப் பள்ளி நடத்திய உரையாடலில் கலந்துகொண்டு அவர் பேசினார்.

முன்னேறிய ஜனநாயக நாடுகளிலும் வளரும் நாடுகள் பலவற்றிலும்கூட இதற்கான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகச் சில அரசியல் எதிர்ப்புகள் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறிச் செல்வதற்கான சாதகமான அரசியல் சூழ்நிலை தேவை என்றும் அதை நம்மால் நிச்சயம் செய்ய முடியும் என்றும் கூறினார்.

ஐநா துணைப் பொதுச்செயலாளர் அமினா முகமட், ஐரோப்பிய ஆணையத்தின் தூய்மையான, போட்டித்தன்மைமிக்க மாற்றத்திற்கான நிர்வாகத் துணைத் தலைவர் தெரசா ரிபெரா, இந்தோனீசியாவின் முன்னாள் நிதியமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி ஆகியோரும் இந்த உரையாடலில் அதிபருடன் கலந்துகொண்டனர்.

தற்போதைய பருவநிலையிலும் வானிலையிலும் வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகள் ஏற்படுவதை மக்கள் உணர்ந்திருந்தாலும், வேலைவாய்ப்பு, வாழ்க்கைச் செலவினங்கள் போன்ற பிரச்சினைகளே அவர்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன என்று அதிபர் தர்மன் சுட்டிக்காட்டினார்.

பருவநிலை மாற்றத்தைப் பற்றிய விவாதங்களை அன்றாட வாழ்வாதாரம், வாழ்க்கைத் தரம், அவர்களின் ஒற்றுமை உணர்வு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திப் பேச வேண்டும் என்பதே தற்போதைய சவாலாகும் என்றார் அவர்.

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைச் சமூக ரீதியாகவும் உள்ளூர் அளவிலும் தற்போதைய சூழலுக்குப் பொருத்தமானதாகவும் மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.

“இதன் அறிவியல் பின்னணி அவர்களுக்குப் புரியாவிட்டாலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை அவர்களின் அன்றாடக் கவலைகளோடு நாம் இணைத்துப் பேசும் வழியைக் கண்டறிய வேண்டும்,” என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
பருவநிலைஅதிபர் தர்மன்தர்மன் சண்முகரத்னம்