ஏழு மாதக் கைக்குழந்தை, மூன்று வயது நடைபயிலும் சிறுவன் என இரு ஆண் குழந்தைகள் முன்னிலையில் வெளிப்படையாகப் போதைப்பொருள் உட்கொண்ட தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் விவரங்களை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) வெளியிட்ட அறிக்கையில் விளக்கியது.
25 வயது ஆடவரும் 24 வயது மாதும் அவர்களது இரு குழந்தைகளுடன் உட்லண்ட்ஸ் அருகில் உள்ள மார்சிலிங் லேன் வீட்டில் வாழ்ந்துவந்தனர்.
அவர்களது வீட்டை செவ்வாய்க்கிழமை காலை சோதனையிட்டபோது சிஎன்பி அதிகாரிகள் தம்பதியர் குழந்தைகளுடன் வெளிப்படையாகப் போதைப்பொருள்களைப் பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது.
கஞ்சா உட்பட, ஐஸ் எனப்படும் மெத்தம்ஃபெட்டமின், எக்ஸ்டசி மாத்திரைகள் என பலவித போதைப்பொருள்கள் வீட்டின் பெரிய படுக்கையறையில் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த அறையில் அந்த இரு குழந்தைகளும் இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
குழந்தைகள் பராமரிப்புக்காக உறவினர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலன் உறுதி செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக சிஎன்பி தெரிவித்தது.
தம்பதிகளின் போதைப்பொருள் சார்ந்த நடவடிக்கைகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களை உரிய நடவடிக்கை எடுக்காமல், இளம் குழந்தைகளுக்கு வெளிப்படுத்துவது அல்லது அவற்றை உட்கொள்ள வைக்கும் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


