சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுப் பரவல் தணிந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
வாராந்தர பாதிப்பு எண்ணிக்கை ஏறத்தாழ 15,000 என்ற அளவிற்குக் குறைந்துள்ளது.
அண்மைய தரவுகள் ஊக்கமளிப்பதாக இருக்கிறது எனக் கூறியுள்ள அமைச்சர் ஓங், கொவிட்-19 தொற்றால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
நாளொன்றுக்கு ஏறக்குறைய 118 பேர் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகச் சனிக்கிழமை (ஜூன் 14) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அமைச்சர் ஓங் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் கொவிட்-19 அலை மீண்டும் ஏறத் தொடங்கியபோது வாராந்தரத் தொற்று எண்ணிக்கை கிட்டத்தட்ட 26,400ஆக இருந்தது.
அத்தொற்றுக்காக நாளொன்றுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 174ஆக இருந்தது.
“இப்போதைய அலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது நல்ல செய்தி. நாளொன்றுக்கு இரண்டு, மூன்று பேரே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். கொவிட்-19 தொற்றைச் சமாளிப்பதில் நமது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு வலுவான மீள்திறனை வளர்த்துக்கொண்டதை இது காட்டுகிறது,” என்று திரு ஓங் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளோர்.
ஆயினும், புதிய கொடுந்தொற்றுகளை அல்லது புதிய கொவிட்-19 அலைகளை எதிர்கொள்ள சிங்கப்பூரர்கள் தொடர்ந்து ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

