சிங்கப்பூர் முழுவதும் இருக்கும் சில்லறை வர்த்தகர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் மூன்று வெளிநாட்டினர்மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட மூவரின் ஒருவரான 29 வயது ஜாங் தியான்யுமீது மேலும் இரண்டு மோசடி குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 15) சுமத்தப்பட்டன.
பூகிஸ் சந்திப்பில் உள்ள ‘ஐஸ்டூடியோ’ (istudio) கடை ஊழியர் ஒருவரை ஜாங் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
அந்த ஊழியரிடமிருந்து வேறு ஒருவரின் கடன் அட்டையைப் பயன்படுத்தி ஜாங், $12,300க்கு மேல் மதிப்புள்ள ஆறு ஐபோன்களை வாங்கியதாகச் சொல்லப்பட்டது.
ஃபூனான் கடைத் தொகுதியில் உள்ள ‘பெஸ்ட் டெங்கி’யில் $8,700க்கு மேல் மதிப்புள்ள நான்கு ஐபோன்களை அக்கடையின் ஊழியரை ஏமாற்றி ஜாங் வாங்கியதாக அவர்மீது நவம்பர் 8ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.
ஜாங் மற்றும் 36 வயது சூ ஸாவ்சென்னும் லி சூவெகியும் சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சூ, லி ஆகிய இருவர் மீதும் மோசடி குற்றச்சாட்டுகள் நவம்பர் 8ஆம் தேதி சுமத்தப்பட்டன. அவர்கள்மீது நவம்பர் 15ஆம் தேதி கூடுதல் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் மூவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியது.
தொடர்புடைய செய்திகள்
அவர்களின் வழக்குகள் நவம்பர் 22ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.