லிட்டில் இந்தியாவுக்கு வருபவர்கள் பெர்ச் ரோடு பாதசாரி கடக்கும் இடம் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30 மாலை 4 மணி முதல் 12 மணி நேரம் மூடப்படும் என்பதால் பாதசாரிகள் அதைப் பயன்படுத்த முடியாது.
பாதசாரிகள் மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்காக, கூட்டம் மற்றும் போக்குவரத்து நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அக்டோபர் 28 அன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
அங்குலியா பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள பெர்ச் ரோடு பாதசாரி கடக்கும் இடம் தற்காலிகமாக மூடப்படுவதால், கிச்சனர் லிங்குக்கு அருகில் அல்லது பாபு லேனுக்கு அருகில் பாதசாரிகள் கடக்கும் இடத்தைப் பயன்படுத்தலாம்.
தேவை ஏற்பட்டால், கேம்பல் லேனுக்கு அருகில் உள்ள பாதசாரி கடக்கும் இடமும் மூடப்படலாம். இது நடந்தால், மாற்று பாதசாரி கடக்கும் இடம் சுங்கை ரோடு அல்லது டன்லப் ஸ்திரீட்டுக்கு அருகில் இருக்கும்.
மக்கள் அருகில் உள்ள மாற்றுக் கடக்கும் இடத்துக்கு செல்ல உதவும் வகையில் பாதிக்கப்பட்ட அனைத்து பாதசாரிக் கடக்கும் இடங்களிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பொதுமக்களுக்கு உதவவும் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் சந்திப்புகளில் துணை காவல்துறை அதிகாரிகளும் நிறுத்தப்படுவார்கள்.
லிட்டில் இந்தியாவில் பண்டிகைக் காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தங்கள் உடமைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


