சுவா சூ காங் அவென்யூ 1ல் அருகில் உள்ள போக்குவரத்து விளக்குகளுக்கு அருகே ஓர் ஆடவர், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) அவரது சைக்கிளில் பொருள்கள் வைக்க உதவும் கூடையில், ஒரு மாதை சுமந்தபடி அதனை ஓட்டிச் சென்றுள்ளார்.
அவ்வழியே வாகனம் ஓட்டி வந்த ஒருவர் புகைப்படமெடுத்து சாலைப் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் நடந்துகொண்ட அவர்கள் இருவரையும் பற்றி பதிவிட்டுள்ளார்.
சைக்கிளோட்டிய ஆடவரது சுய பாதுகாப்புக்கும் உடன் பயணிக்கும் மற்றவருக்கும், பொதுவாகச் சாலையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் அச்செயல் அபாயத்தை விளைவிக்கும் என்று அந்த ஓட்டுநர் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மதர்ஷிப் ஊடகத்தில் ‘கவனத்துக்குரிய ஆபத்தான செயல்’ என்று பதிவிடப்பட்ட செய்தியில் அந்த இளம் ஆடவர் ‘ஹலோரைட்’ என்ற வாடகை சைக்கிளை ஓட்டியுள்ளது புகைப்படத்தில் தெரிகிறது.
கட்டுப்பாட்டை சைக்கிளோட்டி இழக்க நேரிட்டால், அந்த மாதுக்குக் கடுமையான காயங்கள் விளைய வாய்ப்புள்ளது என்று வாகன ஓட்டுநர் பதிவில் கருத்துரைத்தார்.
இவ்வகையான செயல்பாடுகள், சாலை விபத்துகளை அதிகரிப்பதோடு, பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால் அதனைச் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக அந்த ஓட்டுநர் தெரிவித்தார்.

