அல்ஜுனிட் ரோடு மற்றும் சிம்ஸ் அவென்யூ சந்திப்பில் கார் ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் சைக்கிளோட்டி காயமடைந்தார்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) மாலை நிகழ்ந்தது. விபத்தில் சிக்கிய 50 வயது சைக்கிளோட்டி டான் டொக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனைக்குச் செல்லும்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துகுறித்து தங்களுக்கு மாலை 5.05 மணிவாக்கில் தகவல் வந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படையும் தெரிவித்தன.
விபத்து தொடர்பான காணொளியும் படங்களும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. அதில் சைக்கிளோட்டி காரின் முன்பகுதியில் உள்ள கண்ணாடியில் மோதிக் கீழே விழுந்தார்.
சில படங்களில் சைக்கிளோட்டியின் முகத்தில் ரத்தம் வருவதுபோல் இருந்தது. அவருக்குச் சில அதிகாரிகள் உதவுவதும் இரண்டு அவசர உதவி வாகனங்கள் அருகே நிற்பதுபோலவும் இருந்தன.
கார் சைக்கிளோட்டிமீது மோதியதா அல்லது சைக்கியோட்டி கார்மீது மோதினாரா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
அரசாங்க தரவுகள்படி, 2024ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 591 சைக்கிளோட்டிகளும் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணம் செய்பவர்களும் காயமடைந்தனர்.