சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் ஒன்றில் கிட்டத்தட்ட ஓராண்டுக்குமுன் நிகழ்ந்த புகை, நெருப்புச் சம்பவத்திற்கு, சேதமடைந்த கம்பிகளும் திரவமும் காரணமாக இருக்கலாம் என்பதை போக்குவரத்துப் பாதுகாப்பு புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதியன்று, தோக்கியோவிலிருந்து லாஸ் ஏஞ்சலிசுக்குச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றின் பொழுதுபோக்குத் தகட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க, மூன்று தீயணைப்பான்கள் பயன்படுத்தப்பட்டன.
அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
போக்குவரத்து அமைச்சின் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு இவ்வாண்டு மார்ச் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
சம்பவம் நடந்த நேரத்தில் விமானத்தில் 234 பேர் இருந்தனர். இருக்கை 48Kல் இருந்த பயணி தம் முன்னால் புகை வருவதைக் கண்டு விமானப் பணியாளரிடம் அது பற்றித் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட இருக்கைகளிலிருந்து பயணிகள் வேறு இடத்திற்கு மாற்றிவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.