விதிமீறும் தரவு மையங்களுக்கு $1 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படக்கூடும்

பரிந்துரைக்கப்பட்ட மின்னிலக்க உள்கட்டமைப்பு மசோதா

விதிமீறும் தரவு மையங்களுக்கு $1 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படக்கூடும்

2 mins read
b47027c5-86e9-4cbb-8de9-9bca8c0096f0
மின்னிலக்க வங்கிச் சேவைகள், வாகனப் பகிர்வு, மின்வர்த்தகம் போன்ற அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தரவு மையங்களும் மேகக் கணிமைச் சேவைகளும் இன்றியமையாத அடித்தளமாக விளங்குவதால், அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் மீள்திறனை உறுதிசெய்யும் பொருட்டு இந்த புதிய உரிம முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள முக்கியத் தரவு மையங்கள் மற்றும் மேகக் கணிமைச் சேவை நிறுவனங்கள் தங்களின் இணையப் பாதுகாப்பு, வணிகத் தொடர்ச்சி மற்றும் சேவைத் தடங்கல் குறித்த தகவல் தெரிவிப்பு விதிமுறைகளைச் சரிவரப் பேணாவிட்டால், அவற்றுக்கு $1 மில்லியன் வரை அல்லது அவற்றின் ஆண்டு வருவாயில் 10 விழுக்காடு வரை அபராதம் விதிக்க வகைசெய்யும் புதிய மின்னிலக்க உள்கட்டமைப்பு மசோதா பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மின்னிலக்க வங்கிச் சேவைகள், வாகனப் பகிர்வு, மின்வர்த்தகம் போன்ற அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தரவு மையங்களும் மேகக் கணிமைச் சேவைகளும் இன்றியமையாத அடித்தளமாக விளங்குவதால், அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் மீள்திறனை உறுதிசெய்யும் பொருட்டு இந்த புதிய உரிம முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட சில முக்கியச் சேவைத் தடங்கல்களைத் தொடர்ந்து (உதாரணமாக, 2023 அக்டோபரில் தரவு மையக் குளிரூட்டி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாற்றால் 2.5 மில்லியனுக்கும் அதிகமான வங்கி மற்றும் தானியங்கி வங்கி இயந்திர பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன) இந்தச் சட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தைப் பயன்படுத்தும் தரவு மையங்களும் சிங்கப்பூரில் சராசரியாக $100 மில்லியனுக்கும் மேல் ஆண்டு வருவாய் ஈட்டும் மேகக் கணிம நிறுவனங்களும் முக்கிய அடிப்படை மின்னிலக்க உள்கட்டமைப்பு உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த மையங்கள் அவற்றின் இயற்பியல் மற்றும் மின்னிலக்கப் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 3 மெகாவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் தரவு மையங்கள் ‘டிசி’ உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த மையங்கள் அவற்றின் ஆற்றல் பயன்பாட்டுத் திறனை நிரூபிக்க வேண்டும். ஒன்றுக்கும் மிக அருகில் இருக்கும் ‘பியுஇ’ குறியீடு அதிக ஆற்றல் திறனைக் குறிக்கும். மேலும், நீர் பயன்பாட்டுத் திறன், வெப்ப வாயு வெளியேற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவையும் இந்த உரிம ஒப்புதலுக்குக் கணக்கில் கொள்ளப்படும்.

வரம்புக்குட்பட்ட நிலம் மற்றும் எரிசக்தி வளங்களைக் கொண்ட சிங்கப்பூரில், தரவு மையங்களின் மின்சாரப் பயன்பாடு 2020ஆம் ஆண்டில் 7 விழுக்காடாக உயர்ந்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் இப்புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன. பொதுமக்கள் இச்சட்ட வரைவு குறித்த தங்களது கருத்துகளை வரும் ஜூலை 22ஆம் தேதி காலை 10 மணி வரை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்