வசதிபடைத்த வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுவதற்காக 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் இரண்டு செல்வ மையங்களைத் திறக்கப்போவதாக சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கி அறிவித்துள்ளது.
செல்வ நிர்வாகச் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந்த மையங்களைத் திறக்க உள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது. வசதிபடைத்தோரும் அதிக சொத்து மதிப்புடையோரும் வங்கிச் சேவைகளுக்காக அம்மையங்களை அணுகலாம்.
செல்வ நிர்வாகச் சேவைகளுக்காக டிபிஎஸ் வங்கி ஏற்கெனவே மூன்று மையங்களை டிபிஎஸ் டிரசர்ஸ் என்னும் பெயரில் நடத்தி வருகிறது. மரினா பே நிதி மையம், சிக்லாப், நீ ஆன் சிட்டி ஆகிய இடங்களில் அவை இயங்கி வருகின்றன.
அவற்றுடன் புதிய மையங்கள் இணைந்து செல்வ வளமிக்க வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றும்.
அந்த இரு புதிய மையங்களும் எந்த இடத்தில் அமையும் என்பது உள்ளிட்ட மேல்விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று டிபிஎஸ் வங்கியின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களிடம் கூறினார்.
தற்போதைய டிபிஎஸ் டிரசர்ஸ் மையத்தில் வாடிக்கையாளர் ஆவதற்கான குறைந்தபட்ச முதலீட்டுச் சொத்து மதிப்பு $350,000 ஆகும்.
சிங்கப்பூர், ஹாங்காங், சீனப் பெருநிலம், இந்தியா, இந்தோனீசியா, தைவான் ஆகிய ஆறு முக்கியச் சந்தைகளில் அமையவுள்ள 18 டிபிஎஸ் செல்வ நிர்வாக மையங்களின் ஒரு பகுதியாகவே இந்த விரிவாக்கம் செய்யப்படுவதாக டிபிஎஸ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், தனது செல்வ நிர்வாகப் பிரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விரிவாக்க நடவடிக்கைகளில் இதுவே ஆகப்பெரியது என்றும் அது கூறியது.

