டிபிஎஸ், பிஓஎஸ்பி வாடிக்கையாளர்கள் பலரால் திங்கட்கிழமை (ஜூன் 2) பிற்பகல் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவ்வங்கிகளின் மின்னிலக்க வங்கிச் சேவையைப் பயன்படுத்த இயலாமல் போனது.
செயலியிலும் இணையப்பக்கத்திலும் சேவைத் தடை ஏற்பட்டது குறித்து பிற்பகல் 2 மணியிலிருந்து பயனர்கள், சேவைத் தடையைக் கண்காணிக்கும் ‘டவுன்டிடெக்டர்’ இணையப்பக்கத்தில் புகாரளிக்கத் தொடங்கினர்.
பிற்பகல் 3.40 மணி நிலவரப்படி, டிபிஎஸ், பிஓஎஸ்பி சேவைத் தடங்கல் குறித்து மொத்தம் 1,735க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைக்கப் பெற்றன.
பயனர்கள் பலரும் சேவைத் தடை குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
மாலை 4.38 மணிக்கு டிபிஎஸ் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், டிபிஎஸ்/பிஓஎஸ்பி செயலியின் பயன்பாடு மாலை 4.08 மணிக்கு வழக்கநிலைக்குத் திரும்பியதாகத் தெரிவித்தது.
“எங்கள் வாடிக்கையாளர்களின் பொறுமையை நாங்கள் மதிக்கிறோம். இதனால் ஏற்பட்ட சிரமத்துக்காக வருந்துகிறோம்,” என்று வங்கி கூறியது.

